Skip to main content

அந்த வீடியோ மட்டும் வெளியிடவில்லை என்றால்... இன்னும் சொல்லாத உண்மைகளையும் சொல்லுவோம்: வேல்முருகன் பேட்டி

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது, ''மத்திய அமைச்சராக தலித் எழுமலை ஆனபோது, அவர் 5 ஆயிரம் கோடி பணத்தை சம்பாதித்து சுவிஸ் வங்கியில் போட்டுக்கொண்டார், எல்லா மெடிக்கல் கல்லூரிகளிலும் லஞ்சம் வாங்கிக்கொண்டார் என்று சொல்லி, அபாண்ட பழியோ, உண்மையோ? அவரை கட்சியில் இருந்து நீக்கினார். 
 

நான் திருப்பி மருத்துவர் ராமதாஸையும், அன்புமணியையும் கேட்கிறேன், ஐந்து ஆண்டு காலமாக நீங்கதான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தீர்கள். இந்தியா முழுவதும் 500க்கும் மேற்பட்ட மெடிக்கல் காலேஜ் இருக்கிறது. ஒவ்வொரு காலேஜ் அனுமதிக்கும் நீங்கள் எத்தனை ஆயிரம் கோடி வாங்கினீர்கள். ஒவ்வொரு கல்லூரிக்கும் இரண்டு மருத்துவ சீட். அந்த இரண்டு சீட்டை உங்கள் தைலாபுரம் தோட்டத்து வழியாக, ஒவ்வொரு சீட்டும் 20 லட்சம், 30 லட்சம் என விற்றீர்கள். அதில் எத்தனைக்கோடிகள் சம்பாதித்தீர்கள். எல்லா மருத்து கம்பெனிகளிடம் இருந்து எத்தனை சதவீதம் கமிசன் வாங்கினீர்கள். இந்த காசெல்லாம் எங்கே இருக்கிறது. 

 

velmurugan tvk


 

காடுவெட்டி குரு மருத்துவமனையில் இருக்கிறார். குருவின் தாய் உள்பட அவரது குடும்பத்தினர் ராமதாஸின் காலில் விழுந்து குருவை காப்பாற்ற வேண்டும் என்று கதறினார்கள். அப்போது, தைலாபுரம் தோட்டத்தை திறந்து காட்டி, அங்கு உள்ள தென்னை மரத்தில் இருந்து வரும் தேங்காய், இளநீரை வைத்துத்தான் நானே கஞ்சி குடிக்கிறேன். என்னுகிட்ட எங்கே இருக்கு 50 லட்சம், ஒரு கோடி... குருவை சிங்கப்பூருக்கு இழுத்துப்போறத்துக்கு? என்று அவரது குடும்பத்தாரிடம் சொல்லியிருக்கிறார் ராமதாஸ். 
 

செய்தியாளர்கள் சந்திப்பின்போது குருவின் குடும்பத்திற்கு உதவி செய்வீர்களா என்றார்கள். நடந்ததை மறந்துவிட்டு குருவின் குடும்பத்தினர் உதவி கேட்டால், சொத்தை விற்றாவது குருவை சிங்கப்பூருக்கு அழைத்து செல்ல தயார். ஒரு கோடி ரூபாய் ஆகும் என்றார்கள். என் அண்ணன், தம்பி சொத்தை விற்றாவது அதை செய்ய தயாராக இருப்பதாக சொன்னேன். உடனே ராமதாஸ் சென்னை, பாண்டிச்சேரியில் நட்சத்திர ஓட்டலில் கூட்டம் போட்டு என்னை எப்படியெல்லாம் கழுவி ஊத்த வேண்டுமோ அப்படி ஊத்தினார்கள். இரண்டு கோடி வன்னியர்கள் இருக்கிறார்கள். தலைக்கு ஒரு ரூபாய் போட்டாலும் இரண்டு கோடி ரூபாய் வரும். குருவை தனி விமானத்தில் அழைத்துச் சென்று சிங்கப்பூரில் காப்பாற்றுவோம். நீ யாருடா துரோகி என்றார்கள். நான் அதனை பொறுத்துக்கொண்டன். 
 

ஆனால் இன்று அந்த குரு குடும்பம், ராமதாஸை நம்பி நாங்கள் ஏமாந்து போய்விட்டோம். ராமதாஸை நம்பி மோசம் போய்விட்டோம். குருவின் தங்கை சொல்கிறார், எங்கள் அண்ணன் சாவுக்கு காரணம் மருத்துவர் ராமதாஸ். குருவின் மகன் கனல் சொல்லுகிறார், எங்கள் அப்பாவை மருத்துவ கொலை செய்து விட்டார்கள். குருவின் குடும்பத்தினர் இந்த குற்றச்சாட்டை சொல்லுகிறார்கள்.
 

வேல்முருகன் சொல்வது உண்மையா? மருத்துவர் ராமதாஸ் குருவுக்கு எந்த உதவியும் செய்யவில்லையா? என்று வன்னியர்கள் மத்தியில் கோபம் எழுகிறது. இணையதளங்களில் விவாதங்கள் எழுகிறது. அப்போது உடனே ராமதாஸ் மருத்துவமனைக்கு சென்று என்ன செய்தார் தெரியுமா? அன்புமணி என்ன செய்தார் தெரியுமா? குரு சுவாசிக்கும் டியூபை எடுத்துவிட்டு, நான் நல்லா இருக்கிறேன், அய்யாதான் எனக்கு செலவு செய்கிறார், அய்யாதான் என்ன பார்க்கிறார் என்று குரு சொல்லுகிற மாதிரி ஒரு வீடியோ எடுத்து வெளியிட்டார்கள். அந்த வீடியோ மட்டும் வெளியிடவில்லை என்றால், குருவின் மறைவுக்கு வந்த ராமதாஸ் பெரிய பாதிப்பை சந்தித்திருப்பார். சந்தித்தார். அன்புமணி விரட்டி தூக்கியடிக்கப்பட்டார். ஜி.கே.மணி அடித்து தூக்கிவீசப்பட்டார். இவையெல்லாம் அங்கு லோக்கலில் ரிப்போர்ட்டாகியிருக்கிறது.
 

ராமதாஸ் 80களில் தொடங்கி மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் வரை போராளி தலைவராகத்தான் இருந்தார். மத்திய அமைச்சர் பதவிகளை வகித்தார்கள். மத்திய அரசில் இரண்டு சதவீதம், மாநிலத்தில் 20 சதவீதம், வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டை பற்றி சோனியா ஆட்சியிலேயோ, வாஜ்பாய் ஆட்சியிலேயோ வாய் திறந்திருக்கிறாரா? ஒருவேளை எனக்கு உடல்நிலைதேறி நான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டால் இதையெல்லாம் பற்றி பேசுவேன். நானும், குருவின் குடும்பமும் இன்னும் சொல்லாத உண்மைகளையும் சொல்லுவோம்''. இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.