Skip to main content

எனக்கு எடப்பாடி கொடுத்த பதவி... நீ யாரையும் சிபாரிசுக்கு கூப்பிட்டு வராதே... சிக்கும் அதிமுகவின் முக்கிய புள்ளி!

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

நம்முடைய செல்போனிற்கு வந்த அந்தக் குரல் தழுதழுத்த நிலையில், "எங்களுக்கு வேறு வழி தெரியல. நக்கீரனை விட்டா வேற நாதியில்ல...' என்கிற தவிப்போடு நம்மிடம் பேசியது. "சார்,…நான் தீவிர எம்.ஜி.ஆர். ரசிகன். மக்களிடம் தினசரி இரண்டறக் கலந்திருக்கும் ஆவின் பால் நிறுவனத்தில் தினசரி கஷ்டப்பட்டு வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்களை மிரட்டி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்திற்கு லஞ்சம் கேட்டு மிரட்டுகிறார்கள். கொஞ்சம் விசாரிச்சு எழுதுங்க சார். எம்.ஜி.ஆர். பெயரில் ஆட்சி நடத்தும் இந்த அரசாங்கத்தை இந்த சேர்மன் கார்த்திகேயனும் அவருடைய தம்பி அரவிந்தும் சேர்ந்து உழைப்பாளிகளின் உழைப்பை உறிஞ்சுகிறார்கள்'' என்று புலம்பித் தீர்த்தார். அதே நேரத்தில் திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திருச்சி ஆவின் சேர்மனான கார்த்திகேயன், "என்னோட 20 வருட அரசியலுக்கு முதல்வர் எடப்பாடி கொடுத்திருக்கிற இந்தப் பதவியை பயன்படுத்தி அவருக்கு பெருமை சேர்ப்பது மாதிரி நடந்துகொள்வேன். நீங்க ரெகமண்டேஷன்னு யாரையும் கூட்டிக்கிட்டு வரவேண்டிய அவசியம் இல்ல. நேரடியா பேசுங்க நானே பேசிக்கிறேன்'' என்றார்.

 

admk



என்ன நடக்கிறது ஆவின் பண்ணையில் என விசாரணையில் இறங்கினோம். கார்த்திகேயன் பொறுப்பேற்றவுடன் ஆவின் ஓய்வூதியர் சங்கத்தின் பொறுப்பாளர்களாக நாகராஜன், குருநாதன் என இரண்டுபேரை அலுவலகத்தில் பொறுப்பாளராகப் போட்டார். 2005-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டுவரை ஓய்வு பெற்றவர்களுக்கு ஈட்டு விடுப்பு, ஈட்டா விடுப்பு சம்பளம் கொடுக்க வேண்டும், இந்தப் பணத்தை வாங்குவதற்கு 40 சதவீதம் லஞ்சமாக பணத்தை முன் கூட்டியே கொடுத்தால்தான் இந்த விடுப்பு பணத்தை இவர்கள் கொடுக்கிறார்கள். வேறு வழி தெரியாமல் குடும்ப நெருக்கடி காரணமாக லஞ்சம் கொடுத்து ஈட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஓய்வுபெற்றோர். லஞ்சம் கொடுக்காதவர்களிடம், "நீங்க எப்படி வாங்குறீங்கன்னு பாக்குறேன்' என்று சேர்மன் தம்பி அரவிந்தன் மிரட்டுகிறார்.

 

admk



தினமும் குறைந்தது 3 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆகிறது. இதில் 1 ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரை தனியாக கமிஷன் எடுக்கிறார்கள். ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் கமிஷன் வந்தால் சும்மாவா இருப்பார். நல்ல நிலையில் இருந்த அலுவலகத்தை 20 லட்ச ரூபாய்க்கு புதுப்பித்துள்ளார். இந்த ஆவின் பால்பண்ணையில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்தவர்களை இன்னும் ஒப்பந்த ஊழியர்களாவே வைத்திருக்கிறார்கள். யாரையும் நிரந்தரம் ஆக்கவில்லை. உச்சகட்டமாக மனோகர் என்பவரை 3 வருடமாக ஒப்பந்த ஊழியராகவே வைத்திருக்கிறார். "இதுவரை ஆவினில் 96 போஸ்டிங் போட்டிருக்கிறார்கள். இதில் 3 லட்சம் முதல் 15 லட்சம் வரை பணம் வாங்கியிருக்கிறார்கள். இப்போ 200 பணிகளுக்கு போஸ்டிங் போடப்போகிறார்கள். இதிலும் கடைசிநாள் நேரில் கொண்டுவந்து கொடுத்த விண்ணப்பத்தை வாங்க மறுத்துவிட்டார்கள்' என்கிறார்கள் அங்கு பணியாற்றியோர்.

ஓய்வுபெற்றோருக்கு லஞ்சமின்றி ஈட்டுத்தொகை பெற்றுத்தர நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக முறையிடு பவரான இலக்குமணகுமார் நம்மிடம், "2016 வரை திருச்சி ஆவின் லாபத்தில் இயங்கியது. இப்போது நட்டத்தில் தள்ளாடுகிறது'' என்கிறார்.


"இப்படி மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் இந்த நிறுவனத்தை வைத்து சம்பாதித்தவர்களுக்கு அவர்களுடைய அரசியல் வாழ்வுக்கு இந்த பதவிதான் கடைசியாக இருந்துள்ளது. இந்தப் பதவிக்கு பிறகு உயர் பதவிக்கு சென்றது இல்லை. உதாரணமாக பொன்.கலிய பெருமாள், திருநாவுக்கரசு, இளவரசன், கே.கே.தங்கராசு, ஆயிலை பழனியாண்டி, எஸ்.எம்.ராஜேந்திரன், இப்போ கார்த்திகேயன்.

இவர், 2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் மரியம்பிச்சையுடன் அ.தி.மு.க.வில் நுழைந்தவர். மரியம்பிச்சை சினிமா வினியோகஸ்தர் தொழில் செய்துவந்த நிலையில்... அவருடைய உதவியால் சென்னையில் உள்ள சினிமா புரோக்கர் இவருக்கு நெருக்கமாகவும், அவர் மூலம் அ.தி.மு.க. அமைச்சர்கள் பலர் இவருக்கு மிகநெருக்கமாகவும் மாற இந்த பழக்கத்தில் பலரையும் திருச்சி சங்கம் ஓட்டலுக்கு அழைத்துவருவார். இவர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் கிடைத்ததும் அவர் மூலம் மாவட்டச் செயலாளர் சிபாரிசு இல்லாமல் மாவட்ட மாணவர் அணி பொறுப்பு கிடைத்தது. தற்போது மாவட்ட ஆவின் சேர்மன் பதவி என தன் தகுதிக்கு மேல் அரசியலில் வளர்ச்சியடைந்துள்ளார் "ஆவின்' கார்த்திகேயன். அடுத்து தன்னுடைய தம்பிக்கு கவுன்சிலர் பதவியும், தனக்கு கிழக்கு தொகுதியும் கூடுதலாக மா.செ. பதவியும் முதல்வர் தரப்போகிறார் என்று எங்கேயும் எப்போதும் எடப்பாடியின் கிச்சன் கேபினட் பெயரைத்தான் பயன்படுத்துகிறார்.


ஆவின் வழியே வந்த வருமானத்தின் மூலம் முதல்வர் எடப்பாடி பெயரை பயன்படுத்தி லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பான, ரஜினியின் "தர்பார்' படத்திற்கு திருச்சி பகுதியான டி.டி. ஏரியா முழுவதும் ரைட்ஸ் வாங்கியிருக்கிறார். கடந்த 10 நாளில் "பிளஸ் மேக்ஸ்' என்கிற நிறுவனத்தை தன்னுடைய தம்பி அரவிந்த் பெயரில் ஆரம்பித்து 7.40 கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள். திரையரங்கு உரிமையாளர்களிடம் பேசி முடிப்பதற்காக சென்னையில் இருந்த பாலாஜி என்பவரை நியமித்து இருக்கிறார். ரஜினியின் படங்களிலே அதிக விலைக்குப் போனது இந்தப் படம்தான்'' என்கிறார்கள்.

இத்தோடு இல்லாமல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள இரண்டு எழுத்து ஓட்டலை விலைக்கு பேசி முடித்துள்ளதாகவும் பேச்சு உலவுகிறது. இது குறித்து விளக்கம் கேட்பதற்காக ஆவின் சேர்மன் கார்த்திகேயனை நேரில் சந்தித்தோம். குற்றச்சாட்டுகளால் ஆவேசம் அடைந்து பேசியவர், அலுவலகத்தை விட்டு நம்மை வெளியேற்றிவிட்டார்.

 

-ஜீ.தாவீதுராஜா
 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளிர் வாக்குகளை ஈர்க்கும் திமுக! தேர்தல் வியூக வகுப்பாளர்கள் கணிப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 Election strategists prediction on Clean sweep victory in the election

அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் முக்கியமான பகுதியினர் பெண்கள். அந்த வாக்கு வங்கியை இலக்காக வைத்து, தி.மு.க தொடர்ச்சியாக வேலை செய்து வருவது இந்தத் தேர்தலில் வெளிப்படையாகத் தெரிகின்றது. 2024 தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசிய மூன்று முக்கியமான விஷயங்கள்,  மகளிர் உரிமைத் தொகை, பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், புதுமைப்பெண் திட்டம் ஆகியவை. இத்துடன் காலை உணவுத் திட்டம். இவை அனைத்தும் பெண் வாக்காளர்களின் மனங்களை ஒட்டுமொத்தமாக கவரும் நோக்கத்திலானவை என்பது வெளிப் படையான உண்மை !

முந்தைய தலைமுறைக்கு முன்னர் பெண்கள் படிப்பதும், படித்து முடித்து விட்டாலும் வேலைக்கு செல்வது என்பதும் அவ்வளவு எளிதானதாக இல்லை. இதனால் பாலின சமத்துவத்தை நிலை நிறுத்துவதற்கு கல்வியும், பொருளாதார விடுதலையும் முக்கியமானதாக பேசப்பட்டது. டாக்டர் பட்டமே பெண் பெற்றிருந்தாலும் வேலைக்கு சென்று பொருள் ஈட்டவில்லை எனில், அந்தப் பட்டம் வெறும் திருமண பத்திரிக்கையில் பெயருடன் இணைத்துக் கொள்வதற்கு மட்டுமே பயன்படும். உலகம் முழுவதும் பெண்கள் முன்னேற்றம் என்பது பல மடங்கு இந்தியாவை விட உயர்ந்திருப்பதற்கு காரணம், அங்கெல்லாம் குடும்பக் கட்டுப்பாடுகள் இல்லை என்பதுதான்.

திராவிட இயக்கங்களின் மிக முக்கியமான இலக்கு பெண் உரிமையும், சமத்துவமும் தான். பெரியார், பெண் உரிமைகளுக்கு எனத் தனித் தீர்மானங்களையும் நிறைவேற்றி இருக்கிறார். 1929 ஆம் ஆண்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் ‘பெண்களுக்கு சொத்தில் சம உரிமை’ எனும் தீர்மானம். பெரியார் உயிருடன் இருக்கும் வரை, அந்தச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், 1989 ஆம் ஆண்டு கலைஞரால் தமிழ் நாட்டில் பெரியார் கண்ட கனவு சட்டமாக்கப்பட்டது.

 Election strategists prediction on Clean sweep victory in the election

இந்த வரலாற்றில், முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் உரிமைத் தொகை திட்டம் மூலம், பெண் பொருளாதாரச் சுதந்திரத்தை மேலும் வலுப்படுத்தினார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பெண்களின் உயர் கல்விக்கு மாதம் 1000 ரூபாய் இவையும் பெண்களைக் கவரும் திட்டங்கள். இத்திட்டங்களின் மூலம் 1 கோடியே 6 இலட்சம் குடும்பங்கள் பயன் பெறுகின்றனர். இது உளவியல் ரீதியாக பெண்களுக்குப்  பெரும் பலத்தைக் கொடுக்கிறது இந்தத் திட்டங்கள்.

கலைஞர் கொண்டு வந்த மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தைத்தான், ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 50000 ஆகவும், தாலிக்கு தங்கம் என்றும் அறிவித்தார்.  இதே திட்டத்தைதான், இன்றைய கால வளர்ச்சிக்கு ஏற்ப முதலமைச்சர் ஸ்டாலின், ‘புதுமைப் பெண் திட்டம்’ ஆக மாற்றி, தாலிக்குத் தங்கம் என்பதைவிட, உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 என்ற முற்போக்கான திட்டமாகக் கொண்டுவந்தார். இது இளம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தால் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை 29 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவிலேயே பெண்கள் உயர்கல்வி சேர்க்கையில் 48.6% பெற்று பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலாவதாக உள்ளது. இன்னும் 5 வருடங்களில் புதுமைப் பெண் திட்டம் மூலமாகத் தமிழ்நாடு மிக பெரிய அளவில் முன்னேறி இருக்கும்.

தாலிக்குத் தங்கம் தராமல் இருப்பதைத் தங்களுக்குச் சாதகம் ஆக்கிக் கொள்ள முடியுமா என்று இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வினர் முயலுகின்றனர். ஆனால் பெண் பிள்ளைகள் கல்வி பயில வேண்டும் என்பதைத்தான் தாய்மார்கள் விரும்புகின்றனர். 1921-இல் பெண்களுக்கும் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தது நீதிக்கட்சி. அப்போது தொடங்கி, பெண்கள் உரிமையில் இரண்டு திராவிடக் கட்சிகளும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. அதில், எம்.ஜி.ஆர் என்கிற ஆளுமை பிம்பமும், ஜெயலலிதா என்கிற பெண் ஆளுமைப் பிம்பமும் அ.தி.மு.கவிற்குப் பெண்கள் வாக்கு வங்கியை உருவாக்கித் திடப்படுத்தியது.

 Election strategists prediction on Clean sweep victory in the election

இப்போது அந்த வாக்கு வங்கியைத் தனக்கானதாக மாற்ற ஸ்டாலின் முயன்றுள்ளார். அதில் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் கணிசமாக வெற்றி பெறவும் செய்தார். 2024 இல் இன்னும் பெரிய அளவில் பெண்கள் தி.மு.கவிற்கு வாக்கு அளிப்பார்கள் என்று கணிக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் ஏழைப் பெண்களுக்கு ஆண்டிற்கு 1 இலட்சம் வழங்கும் மகாலட்சுமி திட்டம், மத்திய வேலைவாய்ப்பில் 50 சதவிகிதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு ஆகியவையும் பெண் வாக்காளர்களைக் கவர்ந்திருப்பதாகவே சில புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்தத் தேர்தலில் தமிழ்நாட்டில் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட பெண்களே இம்முறை 10 லட்சத்து 89 ஆயிரத்து 394 பேர் அதிகமாக இருக்கிறார்கள். அதனால், இந்த முறை பெண்கள் அளிக்கும் வாக்குகள், தமிழ்நாட்டில் தி.மு.க.வின் வெற்றியை  க்ளின் ஸ்வீப் செய்ய உதவும் என்கிறார்கள் தேர்தல் வியூக வகுப்பாளர்கள்.

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.