Skip to main content

கொள்ளையடிப்பதில் சாதனை படைக்கும் ஆவின் நிர்வாகம்... தடுக்காவிட்டால் ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது... -பால் முகவர்கள் சங்கம் அறிக்கை! 

Published on 16/08/2020 | Edited on 26/08/2020

 

Aavin milk

 

ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளையும், ஊழல்களையும் அடையாளம் கண்டு உரிய விசாரணை நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆவின் நிறுவனத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என பால் முகவர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனர் & மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிர்வாகம் கரோனா நோய்த் தொற்று பேரிடர் காலமான தற்போது நாளொன்றுக்கு சுமார் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்திருப்பதாகவும், இந்த கரோனா பேரிடர் காலத்தில் ஆவின் நிறுவனம்  28% வளர்ச்சியோடு இந்தியாவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

 

பால் கொள்முதல் மற்றும் விற்பனையில் குஜராத்தின் அமுல் நிறுவனம் முதலிடத்திலும், கர்நாடகாவின் நந்தினி பால் இரண்டாவது இடத்தில் அதுவும் பால் விற்பனையில் நாளொன்றுக்கு அறுபது இலட்சம் லிட்டரும், தயிர் விற்பனையில் நாளொன்றுக்கு ஐந்து இலட்சம் லிட்டரும் என்று வெண்மைப்புரட்சியில் புரட்சி செய்துள்ளது என்பதே உண்மை. மகாராஷ்டிரா உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் போது விற்பனையில் வெறும் 25 லட்சம் லிட்டர் என்கிற இலக்கை நீண்ட காலமாக தாண்டாமல் இருக்கும் ஆவின் நிறுவனம் தினசரி 40லட்சம் லிட்டர் பாலினை கொள்முதல் செய்துவிட்டு அதனை வளர்ச்சியாக மெச்சிக் கொள்வது சுய தம்பட்டம் மட்டுமல்ல ஆவினில் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கும் ஊழல்களையும், முறைகேடுகளையும் மறைக்கும் முயற்சியாகும்.

 

Ponnusamy Milk consumer welfare

 

ஆனால் தற்போது ஊரடங்கு ஐந்தாவது மாதமாக அமலில் இருக்கும் சூழலில் நுகர்வோர் பயன்பாட்டில் ஆவின் பால் விற்பனை என்பது அபாரமாக ஒன்றும் உயரவில்லை. அதே நேரம் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலினையே கொள்முதல் செய்ய மறுத்து வருவதால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட ஆவின் ஒன்றியங்களில் இன்றளவும் பால் உற்பத்தியாளர்கள் பாலினை சாலையில் கொட்டி போராடும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. 

 

இதிலிருந்து ஆவின் நிர்வாகம் தரப்பில் கொள்முதல் செய்வதாகச் சொல்லப்படும் தகவல் பொய் என்பதும், கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களிடம் பாலினை கொள்முதல் செய்யாமல் தனியாரிடம் பால் கொள்முதல் செய்து ஆவினுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது.

 

ஆவின் இணையம், ஒன்றியங்களில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களை, ஆலசோகர்கள் (Consultant) என்ற பெயரில் நியமித்து நடக்கும் இமாலயத் தவறுகள் இன்றும் தொடர்கதையாகி தொடர்கிறது என்பதே நிதர்சனம்.

 

http://onelink.to/nknapp

 

ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளையும், ஊழல்களையும் அடையாளம் கண்டு உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனத் தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆவின் நிறுவனத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவின் மாதாந்திர பால் அட்டையில் மாற்றம்!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
A change in the monthly milk card

ஆவின் மாதாந்திர பால் அட்டையை எளிய நடைமுறையில் காகிதமில்லா முறையில் அறிமுகம் செய்யப்படுவதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆவின் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “எளிய நடைமுறையில் காகிதமில்லா ஆவின் மாதாந்திர பால் அட்டை அறிமுகம் செய்யப்படுகிறது. பெருநகரச் சென்னை மாநகராட்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பால் அட்டை விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் தற்போது காகிதமில்லா பால் www.aavin.tn.gov.in இணையதளத்தின் மூலம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் அறிமுகம் செய்துள்ளது.

பொதுமக்கள் ஆவின் வட்டார அலுவலகங்கள் மூலமாகவும், இணையதளம் மூலம் பதிவு செய்யும்பொழுது அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இக்குறுஞ்செய்தியைக் கொண்டு நுகர்வோர்கள் ஆவின் பால் டெப்போக்களில் காண்பித்து பால் வகைகளை எளிதில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள காகித பால் அட்டையையும் ஆவின் வட்டார அலுவலகங்களுக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் முனிசிபல் சாலை, அந்தோனியார் கோயில் தெரு, சண்முகபுரம், ஹவுசிங் போர்டு காலனி, பெரிசன் காம்ப்ளக்ஸ் சாலை, டீச்சர்ஸ் காலனி, 3வது மைல் பாலம் அருகில், தமிழ்ச் சாலை, 3வது மைல் பாலகம், ஸ்டேட் பாங்க் காலனி, கோபாலராயபுரம், சாயர்புரம், கருங்குளம் உள்ளிட்ட 13 பகுதிகளில் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி ஆவின் பால், பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தொடர் கனமழை; தயார் நிலையில் ஆவின் நிர்வாகம்

Published on 17/12/2023 | Edited on 17/12/2023
Continuous heavy rain Management of Aavin readiness

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் தற்போது கனமழை பொழிந்து வருகிறது. நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (18.12.2023) காலை 8.30 மணி வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி பால் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆவின் நிர்வாகத்தின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அதிக கன மழையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (17.12.2023) மாலை 5 மணி அளவில் சேலத்திலிருந்து பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ஆவின் நிறுவனம் போதுமான அளவில் பால் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இது தொடர்பாக ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஆவின் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதையொட்டி இம்மாவட்டங்களில் போதிய அளவு ஆவின் பால் பொதுமக்களுக்கு கிடைக்க ஆவின் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Continuous heavy rain Management of Aavin readiness

ஆவின் நிறுவனம் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதலாகப் பால், பால் பவுடர் மற்றும் நீண்ட நாள் உபயோகப்படுத்தக் கூடிய (UHT) பதப்படுத்தப்பட்ட பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் கிடைக்க போதுமான அளவு கையிருப்பு உள்ளது. மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.