Skip to main content

சுமார் ரூபாய் 7.92 கோடி கையாடல்... அமைச்சர்கள் ஆதரவு இருப்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு

Published on 19/07/2020 | Edited on 20/07/2020

 

ponnusamy milk

 

ஆவின் கூட்டுறவுச் சங்க முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? தமிழக முதல்வருக்கு பால் முகவர்கள் சங்கம் மின்னஞ்சல் வாயிலாகக் கடிதம் அனுப்பியுள்ளது.

 

இக்கடிதத்தில், 

 

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.

 

மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கத்தில் கடந்த 2017-2018ஆம் நிதியாண்டில் அ.தி.மு.க. பிரமுகர்களும், அச்சங்கத்தின் நிர்வாகிகளுமான தலைவர் பாண்டி, உபதலைவர் பரமானந்தம் உள்ளிட்டோர் சுமார்  7,92,41,616.00 ரூபாய் (சுமார் எட்டு கோடி ரூபாய்) என்றளவுக்கு கையாடல் செய்தது தணிக்கையில் தெரிய வந்ததும் மோசடி செய்யப்பட்ட தொகையை உரியவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என தணிக்கைதுறை அதிகாரிகள் உத்தரவிட்டு மூன்றாண்டுகளாகியும் இது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே சமயம் தவறிழைத்தவர்கள் அப்பொறுப்புகளில் இன்றளவும் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

 

தமிழக அரசின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமான ஆவின் லஞ்ச, ஊழல் முறைகேடுகள் இல்லாமல் சிறப்புற செயல்பட வேண்டும், ஆவினின் முதுகெலும்பாக திகழும் பால் உற்பத்தியாளர்கள், ஆவின் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பு வீணாகக் கூடாது, அது மோசடி பேர்வழிகளிடம் சிக்கி தமிழக அரசுக்கும், ஆவின் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்கிற நல்லெண்ண அடிப்படையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மேற்கண்ட முறைகேட்டில் ஈடுபட்டு மோசடி செய்தவர்களிடம் இருந்து அந்தத் தொகையை வசூலித்து பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஆவின் ஊழியர்களுக்கு வட்டியோடு திருப்பி வழங்க வேண்டும் எனக் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி தமிழக அரசுக்கு கோரிக்கை முன் வைத்திருந்தோம்.

 

இந்நிலையில் ஆவின் கூட்டுறவுச் சங்கத்தில் சுமார் எட்டு கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கத்தின் செயலாளர் மதலையப்பன், கணக்காளர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் மீது மட்டுமே தற்போது வழக்குப் பதிவு செய்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

ஆனால் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோரது ஆதரவாளர்களாக இருப்பதால் அச்சங்கத்தின் தலைவர் பாண்டி மற்றும் உபதலைவர் பரமானந்தம் ஆகியோர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

 

அம்பை எய்தோர் மீது நடவடிக்கை எடுக்காமல் வெறும் அம்புகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும் கூட்டுறவுச் சங்கத்தின் உபதலைவராக இருக்கும் பரமானந்தம் அதிமுக தொழிற்சங்கத்தின் மாநில இணைச் செயலாளராக இருப்பதால் அவரையும், பாண்டியையும் காப்பாற்றிட ஆட்சியாளர்கள் துணை போகின்றனரோ..? என்கிற சந்தேகமும் எழுகிறது.

 

அதுமட்டுமின்றி தற்போது உபதலைவராக இருக்கும் பரமானந்தத்தின் அண்ணன் பழனிசாமி அவர்கள் சிக்கன நாணயக் கூட்டுறவு சங்கத்தில் ஏற்கனவே தலைவராக இருந்தவர். அவர் அந்தக் கூட்டுறவு சங்கத்தின்  தலைவராக இருந்த காலகட்டத்திலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பெயர் தெரிவிக்க விரும்பாத கூட்டுறவுத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

எனவே மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கத்தில் முறைகேடுகள் நடைபெற காரணமாக இருந்த அச்சங்கத்தின் தலைவர் பாண்டி மற்றும் உபதலைவர் பரமானந்தம் ஆகியோரை அப்பொறுப்புகளில் இருந்து நீக்குவதோடு, அவர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், மோசடி செய்த பணத்தை அவர்களிடமிருந்து வசூலிக்கவும், அச்சங்கத்தின் முன்னாள் தலைவர் பழனிசாமி தலைவராக இருந்த காலகட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும், அந்தக் காலகட்டத்தில் ஆவின் நிர்வாகத்தில் அவர்களுக்கு துணை போன உயரதிகாரிகள் யார்..? யார்...? என்பதையும், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோரது தலையீடு இல்லாமல் விசாரணை நடத்தி தவறிழைத்த குற்றவாளிகள் மீதும் மற்றும் தவறிழைத்தவர்களுக்கு துணை போன ஆவின் அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திடவும், ஆவின் நிறுவனத்தை அழிவில் இருந்து பாதுகாத்திட வேண்டும் எனத் தமிழக அரசை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

 

http://onelink.to/nknapp

 

மேலும் ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு ஓய்வுபெற்ற ஊழியர்கள் உழைப்பின் சேமிப்பையும், ஆவின் நிறுவனத்தின் நலன் சார்ந்தும் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்களது சங்கம் அரசுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் மற்றும் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.