ADVERTISEMENT

ஏழு நாளில் 70 கோடிக்கு வளர்ச்சிப் பணிகள்! தொகுதி மக்களை அசத்திய அமைச்சர்!

09:48 AM Jul 26, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


தமிழ்நாடு முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று 75 நாட்களுக்கு மேலாகிவிட்டது. அமைச்சரவையில் சீனியர்களைவிட ஜூனியர்களுக்குப் பல முக்கிய துறைகளைக் கொடுத்து களமிறக்கியிருக்கிறார். அதோடு அமைச்சர்கள் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உளவுத்துறை மூலம் அமைச்சர்களின் செயற்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்துக்கொண்டுவருகிறார்.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றிபெற்ற சக்கரபாணிக்கு உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் பதவியை ஸ்டாலின் கொடுத்திருக்கிறார். கட்சிக்காக முப்பது வருடங்களுக்கும் மேலாக உழைத்துக்கொண்டு, தொகுதி மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து வந்ததின் மூலமே தொடர்ந்து ஆறாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக சக்கரபாணி வெற்றிபெற்றார். அதன் அடிப்படையில்தான் ஸ்டாலினும் தனது அமைச்சரவையில் இடம் கொடுத்தார். அதோடு கொங்கு மண்டலத்தில் பரவிவந்த கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும் சக்கரபாணியை களமிறக்கினார். அதன் மூலம் இரவு பகல் பாராமல் அதிகாரிகளைக் கொண்டு கரோனா தடுப்புப் பணியில் தீவிரம் காட்டி கட்டுப்படுத்தினார். கரோனாவிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து தனது துறையில் தீவிரம் காட்டிய சக்கரபாணி, டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வுசெய்து, அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களையும் நடத்தினார். அதோடு ரேஷன் கடைகளுக்கும் விசிட் அடித்து ஆய்வு செய்ததுடன் மட்டுமல்லாமல், அங்கு வந்த பொதுமக்களிடம் பொருட்கள் தரமாகவும் எடை குறையாமலும் கிடைக்கிறதா என்று கேட்டு அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றிவருகிறார்.


அதோடு கடந்த ஒருவாரமாக ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள கேதையுறும்பு, புளியமரத்துக்கோட்டை, யோகிபட்டி, இடையகோட்டை, மார்க்கம்பட்டி, குத்திலைப்பு உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளிலும், அதுபோல் தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கள்ளிமந்தையம், கூத்தாம்பாறை, கரியாப்பட்டி, புதூர், தேவத்தூர், கொத்தையம், பொருளூர், கீரனூர், மானூர் உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளிலும் குடிநீர் மேல்நிலை தொட்டி, தரம் உயர்த்தப்பட்ட சாலைகள், சமுதாயக்கூடம், காவேரி கூட்டுக் குடிநீர், கலையரங்கம், ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி, சாக்கடை, கழிப்பறை, பள்ளிகளில் தடுப்புச் சுவர்கள் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக ரூ. 70 கோடி வரை ஒதுக்கீடு செய்து, பூமிபூஜையும் போட்டு பணிகளை அங்கங்கே தொடங்கிவைத்தார்.

அதுபோல் தனது எம்.எல்.ஏ. நிதி மூலம் கீரனூரில் கட்டப்பட்ட இலவச ஆம்புலன்ஸ் சேவை, சமுதாயக் கூடம், சுகாதார மையம் உள்பட சில புதிய கட்டடங்களையும் திறந்துவைத்தார். இப்படி ஒரே வாரத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள இரண்டு ஒன்றியம் மற்றும் நகரத்தில் ரூ. 70 கோடிக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் தொடங்கிவைத்ததைக் கண்டு தொகுதி மக்களே அசந்துபோய்விட்டனர்.

இது சம்பந்தமாக ஒன்றிய பொறுப்பிலுள்ள சில உ.பி.களிடம் கேட்டபோது, “இத்தொகுதியைத் தொடர்ந்து எங்க அமைச்சர் சக்கரபாணி தக்கவைத்து வருவதாலேயே கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் தொகுதி வளர்ச்சிப் பணிகள் சரிவர செய்ய முடியாமல் முட்டுக்கட்டை போட்டு வந்தனர். அப்படியிருந்தும் அமைச்சர், தொகுதி மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி, அடிப்படை வசதிகளை ஓரளவுக்குப் பூர்த்திசெய்து கொடுத்தார். தற்போது தலைவர் ஸ்டாலின் முதல்வராக வந்ததின் மூலம் அண்ணன் சக்கரபாணி அமைச்சராகிவிட்டதால் தொகுதியில் உள்ள அனைத்து வளர்ச்சித் திட்டப்பணிகளையும் தொடங்கிவைத்ததுடன் மட்டுமல்லாமல் மாவட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் போட்டு, தொகுதி வளர்ச்சிப் பணிகளைக் கூடிய சீக்கிரம் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதை அடுத்த ஆய்வுக் கூடத்தில் தெரியப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவும் போட்டிருக்கிறார். அதனாலேயே அதிகாரிகளும் அசுர வேகத்தில் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள். அதோடு மாவட்ட அளவில் ஐந்து லட்சம் மரக்கன்றுகளை நடும் பணிகளையும் தொடங்கிவைத்திருக்கிறார்” என்று கூறினார்கள்.

ஆக, ஸ்டாலின் அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் சக்கரபாணியின் செயல்பாடு என்பது துறை ரீதியாகவும் தொகுதி வளர்ச்சிப் பணி மூலமும் மக்கள் பாராட்டுக்குரியவராக இருந்துவருகிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT