Skip to main content

சட்டங்களை மதிக்காமல் 7 தமிழர் விடுதலையை ஆளுநர் தடுத்து வைத்திருக்கிறார் - திருமுருகன் காந்தி கண்டனம்

Published on 15/12/2018 | Edited on 15/12/2018
thirumurugan gandhi


 

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர், 
 

நெல்லையில் இன்று மாலை பொதுக்கூட்டம் வைத்திருக்கிறோம். ஏழு தமிழர் விடுதலையை தடுத்து வைத்திருப்பதை கண்டித்தும், கஜா புயலுக்கு உரிய இழப்பீடை தமிழக அரசு வழங்கவில்லை என்பதை கண்டித்தும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

 

ஏழு தமிழர் பேர் விடுதலையை இன்னும் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிறது. ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டவர்கள். அரசியல் சாசனத்திற்கோ, சட்டத்திற்கோ அப்பாற்ப்பட்டவர்கள் அல்ல. ஆனால் சட்டங்களை மதிக்காமல் 7 பேர் விடுதலையை தள்ளி வைக்கலாம் என்று செயல்படுவது சட்ட விரோதமானது என்பதுதான் மே 17 இயக்கத்தின் கருத்து. 

 

7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானத்தை செயல்படுத்துவதுதான் அவரது வேலை. அதனை நிறுத்தி வைப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. அவர் காலதாமதம் செய்வது நீதியை மறுக்கும் செயல். சட்டத்தை மீறும் செயல். 7 பேரை விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது. மாநிலத்தில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கொடுத்துள்ளார்கள். மாநில சட்டசபை தீர்மானத்தை மறுக்கின்ற அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. 

 

இப்படி இருக்கும் சூழலில் 7 பேரின் விடுதலையை தடுத்து வைத்திருக்கிறார். இது சட்ட விரோதமானது. இரண்டாவது அவர் நியமனம் செய்யப்பட்டவர். தமிழ்நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. இந்திய சட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்குத்தான் அதிக அதிகாரம் இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமனம் செய்யப்பட்டவர்கள் மக்கள் பிரதிநிதிகள் என்ன சொல்கிறார்களோ அதை கேட்டு நடைமுறைப்படுத்தக் கூடிய கடமை இருக்கிறது. அந்த கடமையை தவறுகின்ற வேலையை ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏழு பேர் விடுதலையை தடுத்து வைத்திருப்பது மோசமான ஒன்று. 

 

அதுமட்டுமில்லாமல் ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தி போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவையெல்லாம் நேர்மையற்ற, சட்டத்திற்கு புறம்பான செயல் என்று மே 17 இயக்கம் கண்டிக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

இட ஒதுக்கீட்டைப் பறித்த மோடியைக் கண்டித்து பாமக போராட்டம் நடத்தாதது ஏன்? - திருமுருகன் காந்தி

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Thirumurugan Gandhi question Why didn't  pmk   struggle against Modi for taking away reservation

சிதம்பரம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டனியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்டி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை, சிதம்பரம் நகரம் உள்ளிட்ட இடங்களில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பானைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிற தேர்தல் இதுவரை நடக்காத வித்தியாசமான தேர்தல்.  இது யார் பிரதமராக வரக்கூடாது என்பதற்கான தேர்தல்.  மோடி என்கிற நாசக்கார சக்தி, பாஜக என்கிற பயங்கரவாத கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கானது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை நாசப்படுத்திய மோடிக்கு முடிவு கட்டும் தேர்தல். கடந்த 10 வருடத்திற்கு முன்பு விலைவாசி எப்படி இருந்தது. தற்போது எரிவாயு, பெட்ரோல், டீசல் பன்மடங்கு உயர்ந்து மக்கள் மீளமுடியாத விலைவாசி உயர்வால் தினந்தோறும் அவதி அடைகின்றனர். இதில் ஜிஎஸ்டி வரியைப் போட்டு மக்களை நசுக்கி வருகிறது.  

தமிழ்நாட்டின் உரிமையைக் காட்டி கொடுக்க பாஜகவுடன் பாமக கூட்டணி சேர்ந்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வி, வேலைகளைத் தட்டிப் பறித்து மேல் சாதிக்காரனுக்கு தாரை வார்த்துள்ளார் மோடி. இட ஒதுக்கீட்டையும், வேலையையும் பறித்த மோடியைக் கண்டித்து பாமக ஒரு நாளாவது போராட்டம் நடத்தி இருக்குமா? இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படும் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். இது என்ன ஞாயம்? இவர்களுக்கு கல்வி உரிமையும், வேலை, இடஒதுக்கீடு உரிமையை மறுத்தபோது போராடியவர் திருமா தான். நெய்வேலி என்எல்சி யில் வன்னியர் சமூக இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என ராஜசபாவில் அன்புமணி பேசினாரா?  கல்விக்கடனை ரத்து செய்யப் பேசினாரா? வெறும் சாதி பெருமை பேசினால் போதாது.  

மோடிக்கு கூஜா தூக்கிய எடப்பாடியும் தமிழகத்தில் என்ன செய்தார் என்பதை கூற முடியாது. விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு யோக்கியர் போல் பேசுகிறீர்களே நீங்கள் மோடிக்கு அடிமையாக இருந்தது தெரியாதா? அமலாக்கத்துறை அனைவர் வீட்டுக்கும் செல்கிறது ஆனால் எடப்பாடி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டிற்கு ஏன் செல்லவில்லை? இதில் இருந்தே தெரியவில்லையா மோடிக்கும் எடப்பாடிக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது. அதற்காக தமிழ்நாட்டு மக்களை அடிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் அதிமுக என்ற அடிமைக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்.

இங்கே நிற்கக்கூடிய வேட்பாளர்கள் திருமாவுக்கும் எதிராக இணையான வேட்பாளர்களா? இவரது கல்வி தகுதிக்கும், பேச்சுக்கும், பாராளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுப்பதை அவர்கள் கொடுப்பார்களா? அவர்கள் அடிமையாக தான் இருப்பார்கள். எனவே பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்திய அளவில் கவனிக்கக் கூடிய தலைவராக திருமா திகழ்கிறார். அவர் இந்த தொகுதி பிரதிநிதி மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பிரதிநிதி ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக செயல்படுகிறார். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது தான் நமக்கு பெருமை.  ஏப்ப சாப்பைகளை அனுப்பி என்ன பயன் எனவே சிந்தித்து திருமாவை தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறவைப்பது நமது கடமை” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலிடப்பார்வையாளர் பாவரசு, கட்சியின் மாவட்டச்செயலாளர் அரங்கத்தமிழ்ஒளி, முன்னாள் மாவட்டச்செயலாளர் பால.அறவாழி, திராவிடர் கழக மாவட்டச்செயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.