Skip to main content

எடப்பாடி அரசிடம் தி.மு.க. கொடுத்த 6 லட்சம் கோரிக்கை மனுக்கள்!  

Published on 30/05/2020 | Edited on 30/05/2020

 

dmk


கரோனா தாக்கத்தால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தில் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிப் போய்விட்டன. நோயோடு வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்கிற ரீதியில் எடப்பாடி அரசும் மக்களைக் கைவிட்டுவிட்டது. இந்த நிலையில், மக்களிடமிருந்து லட்சக்கணக்கான அழைப்புகள் தி.மு.க.வின் பொது உதவி எண்ணிற்க்கு வருவதால், அந்த உதவி எண் மூலம் பெறப்பட்ட 6,23,914 கோரிக்கை மனுக்களை இரண்டாவது முறையாக முதலமைச்சரின் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.  
 


"எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் தி.மு.க.வால் பெறப்பட்ட இந்தப் பெரிய அளவிலான கோரிக்கைகள், தமிழக மக்கள் பெருந்துயரத்தில் இருப்பதின் சான்றாகும்" என்று இந்த மனுக்களைச் சமர்ப்பிக்கும் போது மு.க.ஸ்டாலின் கூறினார்.
 

இந்த மனுக்களை மின் அஞ்சல் செய்வதைத் தவிர, சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கை மனுக்களின் அனைத்து விவரங்களும் இணையத்தளத்தில் வெளியிடப்படுகின்றன. தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் இந்த மனுக்களை அந்தந்த மாவட்ட அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் சமர்ப்பிப்பார்கள். மேலும் பிரச்சனைகளுக்காக எடுக்கப்படும் நடவடிக்கை நிலையைப் பற்றி தொடர்ந்து பின்தொடர்வார்கள்.
 


'ஒன்றிணைவோம் வா' எனும் முன்னெடுப்பில், பொதுமக்களுக்கான உதவி எண், மு.க.ஸ்டாலின் அலுவலகத்துடன்  அனைவரும் தொடர்பு கொள்ளும் மையமாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஸ்டாலினின் அலுவலகத்திற்கு இன்றுவரை மொத்தம் 18 லட்சத்திற்கு மேலான துயர அழைப்புகள் வந்துள்ளன. தி.மு.க. உறுப்பினர்கள், குடிமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சனைகளைத் தொடர்ந்து கவனித்து வருவதால், தி.மு.க. இந்தக் கடினமான நேரத்தில் துன்பத்தில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனின் குரலாக விளங்கி அவர்களின் பிரச்சனைகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எழுப்பி வருகிறது. 

தேவைப்படும் குடிமக்களுக்கு திறம்பட உதவுவதற்கு கிடைக்கக்கூடிய வளங்களையும், அரசு அதிகாரங்களையும் பயன்படுத்துமாறு தி.மு.க. அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இதற்கு முன்னால், அவசர நடவடிக்கைக்காக மக்கள் உதவி எண்ணில் பெறப்பட்ட 1 லட்சம் கோரிக்கைகளின் தொகுப்பையும் கட்சி முன்பு சமர்ப்பித்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கையில் புத்தகங்கள் தவழட்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Let the books creep in the hand says Chief Minister MK Stalin

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபையான யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்துச் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. அதனால் புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.