Skip to main content

“தரிசு நிலங்களுக்கு வழங்கப்பட்ட 503 கோடி ரூபாய் பயிர்க்கடன்” - வரம்பை மீறிய மோசடிகளை விவரித்த ஐ. பெரியசாமி!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

503 crore crop loan has been given to barren lands

 

நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நெல்லை மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி நியமிக்கப்பட்டுள்லார். தேர்தல் பணி தொடர்பாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அஃப்னா பார்க்கில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற நான்கு மாத காலத்தில் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டுவருகிறது. 2.10 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி ரூபாய் நான்காயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பெண்களுக்கு பேருந்தில் கட்டணம் இல்லா பயணம் என்று முதல்வர் அறிவித்து அதில் வெற்றி கண்டுள்ளார்.

 

தமிழகத்தில் 503 கோடி பயிர்க் கடன் தரிசு நிலத்திற்காக கடனாக வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தில் ஒரே நபர் 2.42 கிலோ நகைகளை அடகு வைத்து 384 நகைக் கடன் மூலமாக 72.39 லட்சம் கடன் பெற்று மோசடி செய்துள்ளார். மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கடந்த மூன்று மாதங்களாக தரமான அரிசி வழங்கப்பட்டுவருகிறது. விவசாய பயிர்க்கடன் ரூபாய் 2,393 கோடிக்கும் மேலாக நிலத்தின் அளவிற்கு கூடுதலாக கடந்த அதிமுக அரசு வழங்கியுள்ளது. அதுபோன்று கூட்டுறவு சங்கங்களில் தங்க நகைகளை அடகு வைக்காமல் போலி நகைகள் மூலம் கடன் பெற்றுள்ளனர். போலியான ஆவணங்களை சமர்ப்பித்து நகைக்கடன் பெற்றுள்ளனர். அந்நியோதி, அன்னயோஜனா திட்டத்தின் அட்டையை வைத்தும் அதில் முறைகேடு நடந்துள்ளது.

 

தமிழக அளவில் கூட்டுறவு சங்கங்களில் கடந்த ஆட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. தமிழக முதல்வர் ஆட்சியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும். கட்சித் தொண்டர்கள் தவறு செய்தாலே கடுமையான நடவடிக்கை எடுக்கும் முதல்வர் ஆட்சியில், தேர்தல் நேர்மையாக நடத்தப்படும். அதேபோல் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. தமிழக முதல்வர் நான்கு மாத கால ஆட்சியில் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். எனவே ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெறும்” என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.