அதே சமயம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான குழு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் குழுவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதே போன்று கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினருடனும் தி.மு.க. சார்பில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 2 இடங்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு ம.நீ.ம. போட்டியிடும் தொகுதிகள் குறித்து தகவல் வெளியாக வாய்ப்புள்ளது. அதன்படி காங்கிரசின் கை சின்னத்தில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.