Skip to main content

அனைத்துத் தரப்பினரிடமும் நிலவும் அச்சத்தை போக்குவார் செங்கோட்டையன்... ராமதாஸ் நம்பிக்கை!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

ramadoss


கரோனா பரவல் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு தற்போது நடத்த வேண்டுமா எனக் கேள்வி எழுப்பியதுடன், பொதுத்தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள், கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள், அதிகாரிகளே கூறிவருகின்றனர். தேர்வு எழுதிதான் தேர்ச்சி அறிவிக்க வேண்டும் என்பதில் தங்களக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் மின்னல் வேகத்தில் கரோனா பரவும் நேரத்தில் எந்தவித அச்ச உணர்வும் இல்லாமல் தேர்வு எழுத நல்ல மனநிலை வேண்டாமா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர் பெற்றோர்கள். எதிர்க்கட்சியினர் பலரும் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
 


இந்த நிலையில் ''10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், 12-ஆம் வகுப்பில் கடைசித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதைப் போன்று 11-ஆம் வகுப்பிலும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அச்சம் உச்சத்தில் இருக்கும் நிலையில், 10-ஆம் வகுப்பில் அனைத்துப் பாடங்களுக்கும், 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் விடுபட்ட பாடங்களுக்கும் பொதுத்தேர்வுகளை நடத்துவதில் உறுதியாக இருக்கும் தேர்வுத்துறை, அதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளும் பொதுத்தேர்வுகளை இப்போது நடத்துவதற்கு எதிராக இருக்கும் நிலையில், இந்த விஷயத்தில் அரசு பிடிவாதம் காட்டுவது யாருக்கும் நன்மை பயக்காது.

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை நடத்தி தான் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கரோனா மின்னல் வேகத்தில் பரவி வரும் சூழலில் இத்தேர்வுகளை நடத்த வேண்டுமா? என்பது தான் இப்போதைய வினா. சென்னையில் நேற்று வரை 22,149 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 31,667 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவை அனைத்தும் ஆய்வு செய்து உறுதிப்படுத்தப் பட்ட புள்ளி விவரங்கள் மட்டுமே. சோதிக்கப்படாமல் நோய்த்தொற்றுடன் நடமாடுவோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கலாம்.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி சென்னையில் ஒரு லட்சத்து 21,950 பேருக்கு கொரோனா ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன; அவர்களில் 22,149 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் ஐந்தரை பேருக்கு ஆய்வு நடத்தினால் அவர்களில் சராசரியாக ஒருவருக்கு கரோனா உறுதியாகிறது. ஒரு கோடிக்கும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட சென்னையில் ஒரு லட்சத்துக்கும் சற்று கூடுதலானவர்களுக்கு மட்டும் தான் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஐந்தரை பேரில் ஒருவருக்கு கரோனா உறுதி என்பதை அளவீடாகக் கொண்டால் சென்னையில் ஒட்டுமொத்தமாக எத்தனை பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கக் கூடும் என்பதை மக்களே யூகித்துக் கொள்ளலாம். ஆய்வுக்கு உட்படுத்தப்படாதவர்களுக்கு கரோனா தொற்று இருக்க முடியாது அரசாலோ, அமைச்சர்களாலோ, அதிகாரிகளாலோ உறுதியளிக்க முடியாது.
 


 


சென்னையில் நூறு மீட்டர் தொலைவைக் கடந்து செல்வதற்குள் நாம் எதிர்கொள்ளும் மனிதர்களில் எவருக்கேனும் ஒருவருக்குத் தொற்று இருக்கலாம். காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் தூய்மைப் பணியாளர்கள் என மக்களை அதிக எண்ணிக்கையில் சந்திக்கும் அனைவருமே அதிக அளவில் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்த உண்மைகள் அனைத்தையும் அறிந்து கொண்டு, 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு என்ற பெயரில் பத்து லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்களை ஐந்து நாட்களுக்கு தேர்வு மையங்களில் ஒன்று திரட்டுவது மிகவும் ஆபத்தானதாகும். அவர்களுடன் 11-ஆம் வகுப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு தேர்வுக்காக 8.32 லட்சம் மாணவர்களையும், 12-ஆம் வகுப்பில் எழுதத் தவறிய கடைசி தேர்வை எழுதுவதற்காக சுமார் 35 மாணவர்களையும் குவிய வைப்பது நோயை விலை கொடுத்து வாங்கும் செயலாகவே அமையும். ‘‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’’ என்ற வள்ளுவரின் குறளை எழுத வைத்து அதற்கு மதிப்பெண் வழங்கும் தேர்வுத்துறை, அந்த திருக்குறளுக்கான பொருளைப் புரிந்து, அதன்படி நடந்து கொள்ள வேண்டும். மாணவர்களின் உயிர்களுடன் விளையாடக் கூடாது.

அரசுத் தேர்வுத்துறையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்குப் பொறுப்பாளரான ஓர் இணை இயக்குனர், ஓர் உதவி இயக்குனர் உள்ளிட்ட 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையில் பணியாற்றிய ஓர் உதவியாளர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளார் என்றெல்லாம் இன்று செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழலில் கரோனா வைரஸ் எவ்வளவு ஆபத்தானது? அது எவ்வளவு வேகமாகப் பரவும் என்பது குறித்தெல்லாம் மற்றவர்களை விட தேர்வுத்துறையினருக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்திருந்தும் தேர்வுகளை நடத்துவதில் பிடிவாதம் காட்டக்கூடாது.

கரோனா ஆபத்து உச்சத்தில் இருக்கும் சூழலில் பொதுத்தேர்வுகளை நடத்துவது ஆபத்தானது மட்டுமின்றி கொடுமையானதும் கூட. தேர்வு மையத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டாலும் கூட, 3 மணி நேரம் தொடர்ச்சியாக முகக்கவசம் அணிவதே பெரும் தண்டனை தான். ஓர் அறையில் 10 மாணவர்கள் மட்டும் தான் தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றாலும் கூட ஒரு மையத்தில்  குறைந்தது 100 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுவதாக வைத்துக் கொண்டாலும் கூட, அவர்கள் அனைவரும் அங்குள்ள ஒற்றைப் பொதுக்கழிப்பறையைத் தான் பயன்படுத்த வேண்டும். அதுவும் 5 நாட்களுக்கு இவ்வாறு செய்வது மட்டுமே மாணவர்களிடையே கரோனா பரவுவதற்குப் போதுமானது.

மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுத, படித்திருப்பது மட்டும் போதாது. மகிழ்ச்சியான மனநிலையும்  தேவை. எந்த நேரத்தில் யாரிடத்திலிருந்து கரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் என்ற அச்சத்தில் இருக்கும் மாணவர்களால் எவ்வாறு தேர்வை நன்றாக எழுத முடியும். இவை அனைத்துக்கும் மேலாக, இவ்வளவு ஆபத்தான சூழலில் அவசரமாகப் பொதுத்தேர்வை நடத்தி நாம் எதைச் சாதிக்கப் போகிறோம்? மாணவச் செல்வங்களின் உயிர்களைப் பணயம் வைத்து தேர்வு தேவையா? எனச் சிந்திக்க வேண்டும்?
 

http://onelink.to/nknapp


கல்வித்துறை உயரதிகாரிகளில் பலருக்கும் இத்தேர்வுகளை அவசரமாக, ஆபத்தான சூழலில் நடத்துவதில் உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது. பத்தாம் வகுப்புக்காவது தேர்வுகளை நடத்தியாக வேண்டும்; 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் எதற்கும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை- பொதுத்தேர்வில் தோல்வியடைந்தாலும் அதனால் பாதிப்பின்றி அடுத்த ஆண்டு முதல் 12-ஆம் வகுப்பில் பயிலலாம். அவ்வாறு இருக்கும் போது அந்த வகுப்புக்கு விடுபட்ட ஒரு பாடத்திற்கான தேர்வை நடத்தத் துடிப்பது போகாத ஊருக்கு வழிகாட்டும் செயலாகும்.

எனவே, கரோனா அச்சம் முழுமையாக விலகும் வரை 10-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வையும், 12-ஆம் வகுப்பில் கடைசித் தேர்வை எழுதாத மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும். ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதைப் போன்று 11-ஆம் வகுப்பிலும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டவராக இருப்பார் என்று நம்புகிறேன். ஆகவே, மேற்கண்ட கோரிக்கைகளைக் கொள்கை முடிவுகளாக எடுத்து அறிவிப்பார்; அதன்மூலம் மாணவர்கள், பெற்றோர், மக்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் நிலவும் அச்சத்தை போக்குவார் என நம்புகிறேன்'' எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.