![10 thousand more jobs through TNPSC - Thirumavalavan instructs](http://image.nakkheeran.in/cdn/farfuture/AGV9WKkinXFrK0shDWvsXZxnH34TRsGqbLBbKIZqvUs/1686398977/sites/default/files/inline-images/34_78.jpg)
2022 ஆம் ஆண்டு சுமார் 10,000 குரூப் - 4 காலிப்பணியிடங்களுக்காக நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 2023 இல் வெளியாகி சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்துள்ளது.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இது குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Group 4) நான்காம் வகை பணிகளில் 10,000 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடைபெற்று முடிவுகள் வெளியாகி சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளது.
வழக்கமாக ஆண்டுதோறும் 10,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகும். ஆனால், கடந்த மூன்றாண்டுகள் அறிவிப்பே இல்லாத நிலையில் 30,000 பேருக்கான வாய்ப்பு பறிபோயுள்ளது. இச்சூழலில், தற்போதைய அறிவிப்பு போட்டித் தேர்வு எழுதும் வேலை தேடுநர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு மேலும் 10,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் கூடுதலாக அறிவிப்பு செய்யுமாறு விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.