Skip to main content

வேல் யாத்திரைக்கு ஆட்களைத் திரட்டும் அதிமுக! -திருமாவளவன்

Published on 20/11/2020 | Edited on 20/11/2020
ddd

 

 

தினந்தோறும் தடையை மீறும் பாஜகவினரை கைதுசெய்து ரிமாண்டு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேல் யாத்திரை என்ற பெயரில் பாஜக நடத்தும் நாடகத்துக்கு அதிமுகவும் துணையாக இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்த எதிர்ப்பு உண்மைதான் என்றால் தடையைமீறி யாத்திரை செல்பவர்களைக் கைது செய்து ரிமாண்ட் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம்.  

 

பாஜக சார்பில் வேல் யாத்திரை நடத்துவதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் அதிமுக அரசு தெரிவித்தது. கரோனா பெருந்தொற்று காரணமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதைப் பார்த்த பலரும் அதிமுக அரசு துணிச்சலாக நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று பாராட்டினார்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் ஒரு ஊரில் யாத்திரை என்ற பெயரில் பாஜகவினர் நாடகம் நடத்துவதையும் ஆங்காங்கே கூடுபவர்கள் சிலரைக் கைதுசெய்து மாலையில் விடுவிப்பதையும் பார்க்கும்போது இது பாஜகவும் அதிமுகவும் சேர்ந்து ஆடும் நாடகமா என்ற சந்தேகமே எழுகிறது.  

 

ஒவ்வொரு நாளும் ஒரு ஊரில் பாஜக மாநிலத் தலைவர் தலைமையில் ஊர்வலம் பொதுக்கூட்டம் நடத்துகின்றனர். அவர்களைக் கைது செய்து மாலையில் விடுவிப்பதால் அவர்கள் மீண்டும் இன்னொரு ஊரில் அடுத்த நாள் போய் அதே நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். காவல்துறையின் தடையை  அதே நபர்கள் அடுத்தடுத்த நாட்களில் வெவ்வேறு ஊர்களில் மீறும்போது அவர்களை ரிமாண்டு செய்யாமல் விடுவிப்பது ஏன்? ஒப்புக்கு கைதுசெய்து மாலையிலேயே விடுவிப்பது எந்தவிதமான அணுகுமுறை? இதே அணுகுமுறையை மற்ற கட்சிகளுக்கும் தமிழகக் காவல்துறை பின்பற்றுமா? நாங்கள் அடிப்பதுபோல அடிக்கிறோம் நீங்கள் அழுவது போல அழுங்கள் என்று சொல்வதாகவே இது இருக்கிறது.

 

கரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட மாநிலங்களிலும் கூட மீண்டும் அது அதிக அளவில் பரவத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்திலும் அந்த நிலை ஏற்படக் கூடும். பிஜேபி  யாத்திரையில்  பங்கேற்பவர்கள் எவரும் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதில்லை, முகக்கவசமும் அணிவதில்லை. இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பதன்மூலம் கரோனா பரவுவதற்குத்  தமிழக அரசே உடந்தையாக இருக்கிறது என்பது உறுதிப்படுகிறது.

 

அத்துடன், பாஜகவின் யாத்திரைக்கு அதிமுகவினர் தான் ஆட்களைத் திரட்டி வந்து சேர்க்கிறார்கள்; பணம் கொடுத்து ஆண்களும், பெண்களும் அதிமுகவினரால் வாகனங்களில் ஏற்றிவரப்பட்டு ஒவ்வொரு ஊரிலும் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்யப்படுகிறார்கள். பாஜக நடத்தும் யாத்திரை என்று சொல்லப்பட்டாலும் அதற்கு ஆள் சப்ளை செய்யும் வேலையை அதிமுகவே  செய்து வருகிறது என்பதையும்  பொதுமக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

 

யாத்திரையில் பங்கேற்கும் பாஜகவினர் அரசியல் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்தி ஆத்திரமூட்டும் விதமாகப் பேசுவதோடு, சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வெறுப்புப் பிரச்சாரத்திலும் ஈடுபடுகின்றனர். இது சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக மாறுவதற்குமுன் தமிழக அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். சென்னை உயர்நீதிமன்றமும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

 

கரோனாவைக் கட்டுப்படுத்துவதிலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் உண்மையிலேயே தமிழக அரசு அக்கரையோடு இருந்தால் தடையை மீறி யாத்திரை செல்வோரைக் கைதுசெய்து ரிமாண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.