தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தின் கில்லா பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் ரியாஸ். இவர் நிஜாமாபாத் பகுதியில் தகராறு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் நிஜாமாபாத் காவல் நிலைய காவலர் பிரமோத் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றார். பின்னர் அங்கு தகராறில் ஈடுபட்டு வந்த ஷேக் ரியாஸை கைது செய்து தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.
அப்போது பின்னால் அமர்ந்திருந்த ரியாஸ், திடீரென இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கி தப்பியோட முயன்றார். அதனால் காவலர் பிரமோத் வாகனத்தை நிறுத்தி அவரைப் பிடிக்க முயன்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதல் உருவானது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரியாஸ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர் பிரமோத்தை சரமாரியாகக் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் காவலரின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, ரியாஸ் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நிஜாமாபாத் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காவலர் பிரமோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாநகர காவல் ஆணையர், தப்பியோடிய ரியாஸைப் பிடிக்க 8 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், குற்றவாளியை அடையாளம் காட்டுபவர்களுக்கு ரூ.50,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகராறு செய்தவரைப் பிடிக்கச் சென்ற காவலரை, இளைஞர் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.