வேலூர் மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மற்றும் அவற்றின் ஓட்டுநர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக ஒரு இளைஞர் வேலூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும், ஆபத்தான முறையிலும் பைக் வீலிங் செய்து, அதனை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வந்தது தெரியவந்தது.
இதை அடுத்து, போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞர் கன்சால்பேட்டையைச் சேர்ந்த ரேகன்கான் (19) என்பது தெரியவந்தது. அவர் மீது வேலூர் தெற்கு காவல் நிலையத்தில், அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது தொடர்பாக இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வாகனப் பதிவு எண்ணை ரத்து செய்வதற்கு மோட்டார் வாகனத் துறைக்கு காவல் துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.