Police silence DMK MLA's son at madurai airport
மதுரை மாவட்டம், சிவகங்கை சாலை மேலமடை சந்திப்பு பகுதியில் ரூ. 150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வழித்தடச் சாலை சந்திப்பு மேம்பாலத்திற்கு "வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்" என்று பெயர் சூட்டி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (07.12.2025) திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து டி.என். ரைசிங் (TN Rising) முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னை திரும்புவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு ஏராளமான திமுகவினர் வரவேற்பு அளித்தனர். அந்த நேரத்தில் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ ஜி.கே.மார்கண்டேயனின் மகன் அக்ஷய் மார்கண்டேயன், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது.
உடனே அங்கிருந்த போலீசார், அக்ஷய் மார்கண்டேயனை பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது அவர், “மத கலவரத்தை உண்டாக்குறாங்க சார்” என்று கூறினார். உடனே சுதாரித்திக் கொண்ட போலீசார் அவரின் வாயை மூடி காவல் வாகனத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். ஆனால், கடந்த 3ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனால் இந்து அமைப்பினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர். இதல் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us