Police register case against TVK General Secretary N.anand
பொது சொத்திற்கு சேதம் விளைவித்ததாகக் கூறி தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையைக் கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், நாதக, தவெக ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளன. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் எஸ்.ஐ.ஆர் பணியை எதிர்த்து கடந்த 16ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில், சென்னை சிவானந்த சாலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தலைமையில் அன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 2500க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் செண்டர் மீடியலில் இருந்த கம்பிகளை உடைத்து பொது சொத்திற்கு சேதம் விளைவித்ததாக திருவள்ளிகேணி காவல் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், அந்த பகுதியின் மாவட்டச் செயலாளர் அப்பனு உள்ளிட்ட 2,500 தவெக தொண்டர்கள் மீது திருவள்ளிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Follow Us