புகார்தாரர் மீது குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.50,000/- லஞ்சம் கேட்டுப்பெற்ற வழக்கில், முன்னாள் சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் (தற்போது நாகபட்டிணம் தலைஞாயிறு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்) A.சாமுவேல்ஞானம், வயது 50/2026, த/பெ ஆரோக்கியதாஸ், என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் அவரது தனிப்பட்ட உதவியாளர் சதீஷ், வயது 48/2026, த/பெ வீராசாமி என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிப்பு.

Advertisment

கடந்த 2011 நவம்பர் மாதத்தில் திருச்சி மாவட்டம், ஜீயபுரம் உட்கோட்டம், சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த சாமுவேல்ஞானம் என்பவர், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சோமரசம்பேட்டை, வீரங்கிநல்லுாரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் துரைபாண்டியன் என்பவர் மீது குண்டர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்காமலிருக்க, ரூ.50,000/- லஞ்சமாக கேட்டது தொடர்பாக சாமுவேல்ஞானம் என்பவர் மீது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடந்த 24.11.2011ந்தேதி குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

Advertisment

அதனைத் தொடர்ந்து 25.11.2011ந்தேதி மேற்கொண்ட பொறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர் துரைபாண்டியன் என்பவரிடம் லஞ்சப்பணம் ரூ.50,000/ கேட்டு, அவரது தனிப்பட்ட உதவியாளர் சதீஷ் என்பவர் மூலம் லஞ்சபணத்தை பெற்ற போது, சாமுவேல்ஞானம் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள். மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 

விசாரணை முடிவுற்று இன்று 28.01.2026,  திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு, சாமுவேல் ஞானம், வயது 50/2026, த/பெ ஆரோக்கியதாஸ் முன்னாள் காவல் ஆய்வாளர், சோமரசம்பேட்டை காவல்நிலையம், திருச்சி மாவட்டம் (தற்போது நாகபட்டிணம் தலைஞாயிறு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர்) என்பவருக்கு லஞ்சப்பணம் கேட்ட குற்றத்திற்காக மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும் மற்றும் சதீஷ், வயது 48/2026, த/பெ வீராசாமி என்பவருக்கு சாமுவேல்ஞானம் லஞ்சப்பணத்தை வாங்கி வைத்திருக்க சொன்னதன் பேரில், புகாரிதாரரிடமிருந்து லஞ்சப்பணத்தை வாங்கி வைத்திருந்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.5,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட தண்டனைகளை இருவரும் ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேற்படி வழக்கினை DSP மணிகண்டன், இன்ஸ்பெக்டர்  ஞா.சக்திவேல் ஆகியோர் திறம்பட சாட்சிகளை ஆஜர் செய்து ஒத்துழைப்பு வழங்கியும், அரசு தரப்பு வழக்கறிஞராக கோபிகண்ணன் அவர்கள் திறம்பட வழக்கை நடத்தியும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்துள்ளார்கள்.

Advertisment