ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு காந்திநகரைச் சேர்ந்தவர் கவின் பிரசாத். இவரது மனைவி அமராவதி(28). இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆதிரன் என்ற மகன் இருந்தார். கவின் பிரசாத் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (26-06-25) இரவு 11 மணிக்கு வழக்கம் போல் வேலை முடிந்து கவின் பிரசாத் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அவர் தனது மனைவி, குழந்தையுடன் சாப்பிட்டு தூங்கு சென்று விட்டார்.
நேற்று அதிகாலை 3 மணி அளவில் கவின் பிரசாத் எழுந்து பார்த்தபோது மனைவி அருகில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது சமையலறையில் மனைவி தூக்கு போட்டு கொண்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அமராவதியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே வரும் வழியிலேயே அமராவதி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், வீட்டில் உள்ள ஒரு தொட்டியில் மகன் ஆதிரன் இறந்து கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். குடும்ப தகராறு காரணமாக அமராவதி, தனது மகனை கொன்று விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே, பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 2 பேரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அமராவதி உறவினர்கள், மருத்துவமனை முன்பு திரண்டு உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமராவதி உறவினர்கள், அமராவதி கணவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினர். பிரேதப் பரிசோதனை முடிவு வந்த பிறகு அதற்கு தகுந்தது போல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.
இந்த நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை முடிவு வெளியானது. அதில் அமராவதி உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து வெள்ளோடு போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் அமராவதி கணவர் கவின் பிரசாத்தை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாலை விசாரணை முடிந்து பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வழக்கு பரபரப்பாகி உள்ளது.