Police inspector vandalizes old man's shop at Manjuvirattu
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கி தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், புதுக்கோட்டை - சிவகங்கை மாவட்ட எல்லையில் திருமயம் காவல் சரகம் நெய்வாசல்பட்டி கிராமத்தில் இன்று அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடந்தது. பல ஊர்களில் இருந்தும் காளைகள் கொண்டு வந்திருந்தனர்.
இதனிடையே ஜல்லிக்கட்டு திடலுக்கு சற்று தூரத்தில் வாகனங்களில் ஏற்றி வரப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை சிலர் பொது வெளியில் அவிழ்த்துவிட்டு பாதுகாப்பற்ற முறையில் மஞ்சு விரட்டு நடத்தியுள்ளனர். இதனையறிந்த திருமயம் போலீசார், அனுமதி இல்லாமல் பாதுகாப்பு இன்றி மஞ்சுவிரட்டு நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று விளம்பரம் செய்தனர். தொடர்ந்து அந்தப் பகுதிக்கு ஒரு பைக்கிள் சென்ற திருமயம் காவல் ஆய்வாளர் செந்தில் குமார், அந்தப் பகுதியில் பொட்டல்வெளியில் ஓரமாக ஒரு முதியவர் தண்ணீர், சிற்றுண்டிகள், திண்பண்டங்கள் விற்கும் கடையில் இறங்கினார்.
அப்போது ஆய்வாளர் செந்தில், திண்பண்டங்கள், தண்ணீர் பாட்டில்கள் இருந்த மேஜைகளை அந்தப் பொருட்களுடன் தூக்கி புரட்டி கீழே தள்ளி மிதித்துவிட்டு சென்றார். இந்த காட்சி சமூக வலைதளங்ளில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், ‘ஜல்லிக்கட்டு நடக்கிற இடத்தில் இல்லாமல் ஏன் இங்கே வந்து கடை போட்டிருக்கே’ என்று கேட்டு ஓரமாக கடை போட்டிருந்ததை தள்ளிவிட்டு மிதிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. சாதாரண ஏழை வியாபாரி அவரோட மொத்த பொருளாதாரமே அது தான். அதை அள்ளிட்டு போன்னு சொல்லி இருக்கலாம் அதை செய்யாமல் இப்படி நாசம் செஞ்சுட்டார் ஆய்வாளர். இதனால் அந்த முதிவரின் எல்லாம் பொருளும் சேதமானது என்கின்றனர் பொதுமக்கள். இதனிடையே முதியவரின் கடையை எட்டி உதைத்து சூறையாடிய திருமயம் காவல் ஆய்வாளர் செந்தில் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
Follow Us