பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்குத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் முனைப்பில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்காக ரிப்பன் மாளிகை வளாகம் நேற்று (13.08.2025) மாலை முதலே போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகும் போராட்டத்தைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வந்த நிலையில் போலீசார் குண்டுகட்டாக தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாகப் போராடிய சமூக செயற்பாட்டாளர்களான வளர்மதி, வழக்கறிஞர் நிலவு மொழி ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்ததாகவும், அதன் பின்னர் இருவரும் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே இரவு முழுவதும் சீருடையில் இல்லாத காவலர்கள் அவர்களை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலவு மொழியின் கை உடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரும் சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us