Police impose 23 conditions on Vijay Photograph: (TVK VIJAY)
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 13ஆம் தேதி (13.09.2025 - சனிக்கிழமை) அன்று திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காகத் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே விஜய் பேசுவதற்கு தவெகவினர் அனுமதி கேட்டிருந்த நிலையில் போலீசார் அதற்கு அனுமதி மறுத்தனர்.
அதனைத் தொடர்ந்து காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி காவல்துறையினரிடம் தவெகவினர் கடிதம் கொடுத்தனர். ஆனால் அந்த இடத்திலும் விஜய் பேச அனுமதி அளிக்க காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர். அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் அனுமதி மறுக்கப்படுவதாகக் கடிதத்தில் காவல்துறையினர் விளக்கம் அளித்தனர். அதேபோன்று 4 இடங்களில் ரோடு ஷோ மேற்கொள்ள விஜய் அனுமதி கோரியிருந்தார். அதற்கும் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் பரப்புரை மேற்கொள்ள காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதே சமயம் 23 நிபந்தனைகளை போலீசார் விஜய்க்கு விதித்துள்ளனர். ரோட் ஷோ நடத்தக்கூடாது, அதிகப்படியான வாகனங்கள் பின் தொடர்ந்து வரக்கூடாது, பட்டாசு வெடிக்கக் கூடாது, ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும், அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது, விஜய் வாகனத்தில் அமர்ந்தவாறு தான் செல்ல வேண்டும். பிரச்சாரம் நிறைவுபெறும் பகுதியான மரக்கடை பகுதியில் 20 முதல் 30 நிமிடம் வரை விஜய் பேசலாம் உள்ளிட்ட 23 நிபந்தனைகளை விதித்து காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். காவல்துறையின் இந்த 23 நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்வதாக தவெக கட்சியினர் எழுத்துப்பூர்வமாக வடக்கு மாநகர துணை ஆணையர் சிபினிடம் மனு அளித்துள்ளனர்.