Police explanation Who searched Nainar Nagendran's house?
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ - மெயில் மூலம் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக போலீசார் நேரடியாக சோதனை செய்ததில் அனைத்தும் புரளி எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், நெல்லையில் உள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் வீட்டிற்கு கடந்த 12ஆம் தேதி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனிடையே, அன்று நள்ளிரவு நயினார் நாகேந்திரன் வீட்டை மர்மநபர் ஒருவர் பைக்கில் சென்று நோட்டமிட்டு புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் நயினார் நாகேந்திரனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், நயினார் நாகேந்திரன் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மேலும், அந்த மர்மநபர் யார் என்பது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நொலையில், நயினார் நாகேந்திரன் வீட்டைச் சுற்றி நோட்டமிட்டதாகக் கூறப்படும் நபர் யார் என்பது தொடர்பாக போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், சாலையில் உலவிய மர்ம நபர், உணவு டெலிவரி செய்யும் டெலிவரி ஊழியர் என்பதும், டெலிவரி செய்ய வேண்டிய முகவரி தெரியாததால் அந்த பகுதியில் சுற்றித் திரிந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us