தெலங்கானா காவல் துறை டிஜிபி பதவி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி நீதிபதி சூர்ய காந்த் அமர்வில் இன்று (05.02.2026) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், “மாநிலத்தில் சட்ட ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்படுபவரின் பெயர், மற்ற டிஜிபிக்களின் பெயரைப் பரிந்துரைக்க வேண்டிய முன்மொழிவுகளை அனுப்புமாறு மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுத மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு (யு.பி.எஸ்.சி.) அதிகாரம் அளிக்கப்படுகிறது.
அவ்வாறு டிஜிபிக்களின் பெயரைப் பரிந்துரைக்க வேண்டிய முன்மொழிவுகளை அனுப்பாத மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தை யு.பி.எஸ்.சி. அணுகலாம். அவ்வாறு மனுத்தாக்கல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களின் காவல்துறை தலைமை இயக்குநர் பதவியான டிஜிபி பதவிக்குத் தகுதியானவர்களைக் குறிப்பிட்டு அதற்கான பெயர்கள் அடங்கிய பட்டியலை யு.பி.எஸ்.சிக்கு மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும்.
அதில் இருந்து யு.பி.எஸ்.சி. தேர்ந்தெடுத்து வழங்கும் 3 பெயர்களில் ஒரு பெயரை மாநில அரசு தெரிவு செய்து அவரை டிஜிபியாக நியமிக்கலாம் என்பது நடைமுறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஜார்க்கண்ட் மற்றும் தமிழகத்திலும் பொறுப்பு டிஜிபி நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us