சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அமைந்துள்ள இளமனூர் கிராமத்தில் இரு சமூகத்தினருக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கடும் பதற்றம் நிலவுகிறது. 

Advertisment

இளமனூர் பேருந்து நிலையம் அருகே ஏற்கனவே ஒரு சமூகத்தினர் சார்பில் “கிரிக்கெட் கிளப்” என்ற பெயரில் சமுதாய அடையாளப் பலகை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் வசிக்கும் மற்றோரு சமூகத்தினர் அதற்கருகே தங்கள் சமுதாய அடையாளப் பலகையை நிறுவினர்.

Advertisment

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்று சமூகத்தினர் அந்தப் புதிய பலகையை அகற்றுமாறு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நிலைமை மோசமடைந்து, இரு தரப்பினரிடையே அடிதடி ஏற்பட்டது. இந்த மோதலில் புதிதாகப் பலகை நிறுவிய சமூகத்தைச் சேர்ந்த மூவர் காயமடைந்துள்ளனர். மேலும் மோதலைத் தடுக்கச் சென்ற பழனி, முருகன், கருணாகரன் எனும் மூன்று காவல்துறையினருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிலைமையை கட்டுப்படுத்த சுமார் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் எஸ்.பி. சிவப்பிரசாத் தலைமையில் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தாசில்தார் முருகன், கோட்டாச்சியர் ஜெபி கிரேசியா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையைப் பரிசோதித்து வருகின்றனர்.

Advertisment

இதனிடையே காயம்பட்ட சமூகத்தினர் “அருகிலுள்ள மற்றொரு சமூகத்தின் பலகையும் அகற்றப்பட வேண்டும்; இல்லையெனில் நாங்கள் எங்கள் பலகையை அகற்றமாட்டோம்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் இளமனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பதற்றம் நிலவுகிறது. எந்த நேரத்திலும் கலவரம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், போலீசார் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காயம்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரின் உறவினர்கள் இளையான்குடி காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். மேலும், புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி பரமக்குடி- ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் 50 மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.