தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 13ஆம் தேதி (13.09.2025 - சனிக்கிழமை) அன்று திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Advertisment
முன்னதாக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே விஜய் பேசுவதற்கு தவெகவினர் அனுமதி கேட்டிருந்த நிலையில் போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து மரக்கடை பகுதியில் விஜய் உரையாற்றுவதற்கு அனுமதி கோரி காவல்துறையில் தவெகவினர் கடிதம் கொடுத்தனர். ஆனால் அந்த இடத்திலும் விஜய் பேச அனுமதி கொடுக்க காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் அனுமதி மறுக்கப்படுவதாக கடிதத்தில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர். அதேபோல 4 இடங்களில்  ரோட்ஷோ மேற்கொள்ள விஜய் அனுமதி கோரியிருந்தார். அதற்கும் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

இறுதியாக காந்தி மார்க்கெட் பகுதியில் விஜய் உரையாற்றுவதற்கு அனுமதிகேட்டு தவெகவினர் கடிதம் கொடுக்க உள்ளனர். அதனையும் காவல்துறை நிராகரித்தால் நீதிமன்றம் செல்வது குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதேபோல் தமிழக டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்க அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.