Police control 'Rippon Mansion' - tension due to unusual situation Photograph: (chennai)
பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 வழக்குகள் தொடரப்பட்டது. அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், 'ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் தெரிவித்திருந்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் மீண்டும் 8 ஆவது கட்டமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/13/a4843-2025-08-13-17-39-25.jpg)
வெளியே வந்த போராட்டக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ''போராட்டம் உறுதியாக தொடர்கிறது. முதல்வர் தலைமையில் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்றால் தான் அடுத்த பேச்சுவார்த்தை. முடிந்தால் அப்புறப்படுத்த சொல்லுங்கள். அமைதியான முறையில் ஓரமாக உட்கார்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள பெண் தொழிலாளர்களுக்கு ஏதாவது உயிருக்கு ஆபத்து, உடலுக்கு ஆபத்து ஏற்பட்டால் சென்னை மாநகராட்சி ஆணையர், அமைச்சர் சேகர்பாபு, மேயர், துணை மேயர், இங்கு குவிக்கப்பட்டுள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் தான் பொறுப்பு'' என்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை கைது செய்யும் முனைப்பில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டில் சென்னை மாநகராட்சி அலுவலகம் வந்துள்ளது. 7க்கும் மேற்பட்ட பேருந்துகள் கொண்டு வரப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்படலாம் என்ற நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.