police arrested Trinamool Congress MPs in a mass roundup for Enforcement Directorate raid;
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசனை நிறுவனமான ஐ-பாக் (ஐடி விங்) தலைவர் பிரதிக் ஜெயின் வீடு மற்றும் ஐ-பாக் அலுவலகத்தில் பண மோசடி புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
கொல்கத்தாவில் நடைபெற்று இந்த சோதனை பற்றிய செய்தி கட்சியினருக்கு தெரியவர, உடனடியாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் அலுவலகத்திற்கு முன்பு கூடத் தொடங்கினர். அதனை தொடர்ந்து முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று அலுவலகத்திற்கு முன்பு வந்தார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி, மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
இந்த சூழ்நிலையில், அதிகாரிகள் சோதனை நடத்திய போது தனது அதிகாரத்தையும், அரசியலமைப்பையும் தவறாகப் பயன்படுத்தி முதல்வர் மம்தா பானர்ஜி அலுவலகத்துக்குள் உள்ளே வந்து ஆவணங்களை எடுத்துச் சென்றார் என்றும் சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்டு தங்கள் பணிக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்றும் மம்தா பானர்ஜி மீது கொல்கத்தா நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கில், முதல்வர் மம்தா ஏராளமான போலீஸ் அதிகாரிகளுடன் வந்து, ஆவணங்கள், பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்ற எலெக்ட்ரானிக் பொருள்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகம் முன்பு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் இன்று போராட்டம் நடத்தினர். மூத்த எம்.பிக்களான மஹுவா மொய்த்ரா, டெரெக் ஓ'பிரைன் உட்பட எட்டு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் அவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Follow Us