தூய்மைப் பணியாளர்களை தனியார் வசம் ஒப்படைப்பதை எதிர்த்து சென்னை மாநகராட்சியில் உள்ள ஐந்து மற்றும் ஆறாம் மண்டலத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை ரிப்பன் மாளிகை அலுவலக வாயிலில் போராட்டம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். இருப்பினும் 100 நாட்களைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு இன்று (30-12-25) தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் போலீசார் அங்கு வந்து அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அதனை ஏற்க மறுத்த தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் இறங்கினர். இதனால் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை குண்டுகட்டாகத் தூக்கி கைது செய்தனர். மேலும் அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தை தொடர்ந்து மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்திலும் தூய்மைப் பணியாளர்கள் இன்று போராட்டம் செய்தனர். இதனையறிந்த போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை கைது செய்தனர்.