Police arrest 72 years old man who massacre his wife after 23 years karnataka
மூன்றாவது மனைவியைக் கொலை செய்துவிட்டு தண்ணி காட்டிய 73 வயது முதியவரை 23 வருடங்களுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹனுமந்தப்பா. இவர் கடந்த 2002ஆம் ஆண்டு தனது மூன்றாவது மனைவி ரேணுகாமாவை கொலை செய்தார். அதன் பின்னர், மனைவியின் உடலை ஒரு சாக்குப் பையில் அடைத்து ஒரு பேருந்தில் ஏறி அந்த உடலை பேருந்திலேயே விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கங்காவது டவுன் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மனைவியை கொலை செய்து தப்பிச் சென்ற ஹனுமந்தப்பாவை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். ஆனால், யார் கண்ணில் படாமல் ஹனுமந்தப்பா 20 வருடங்களுக்கு மேலாக தப்பித்து வந்துள்ளார்.
விரிவான தேடல் மற்றும் விசாரணை இருந்த போது ஹனுமந்தப்பாவை போலீசார் கைது செய்ய முடியவில்லை. இந்த சம்பவம் தொடர்பான எந்த தடயங்களும் போலீசாருக்கு கிடைக்காததால் 23 ஆண்டுகளாக அவர் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தார். இந்த சூழ்நிலையில், தனது சொந்த கிராமமான ஹலதால் கிராமத்திற்கு சமீபத்தில் ஹனுமந்தப்பா வந்துள்ளதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹனுமந்தப்பாவை கைது செய்தனர்.
அவரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற ஹனுமந்தப்பா ராய்ச்சூர் மாவட்டத்தின் ஹலதால் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். அதன் பின்னர், அவர் பதர்லி ஆரம்ப சுகாதார மையத்தில் இளநிலை சுகாதார உதவியாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. குற்றம் நடந்தபோது 49 வயதான ஹனுமந்தப்பாவுக்கு தற்போது 72 வயது ஆகிறது. மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த 72 வயது முதியவரை 23 வருடங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.