விலை உயர்ந்த ஓ.ஜி கஞ்சா விற்பனையில் நடிகர் சிம்புவின் மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அதிமுக தேர்தல் வியூக அமைப்பாளர்களை போலீசார் விசாரணை நடத்தி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை திருமங்கலம் பகுதியில், போதைப் பொருள் விற்பனை தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த சில தினங்களுக்கு முன்பு தியானேஸ்வரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சரத், முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட சர்புதீன் முகமது மஸ்தான் ஆகியோருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது.

Advertisment

அதன்படி, அந்த 3 நபர்களை போலீசார் கைது செய்தனர். அதில், கைது செய்யப்பட்ட சர்புதீன் முகமது மஸ்தான் என்பவரிடம் 10 கிராம் ஓ.ஜி. கஞ்சா, ரூ.27 லட்சம் பணம், சொகுசு கார், 8 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், கைது செய்யப்பட்ட சர்புதீன் நடிகர் சிம்புவின் மேலாளர் என்பதும், கடந்த 2021ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் அவர் இணை தயாரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் ரூ.27 லட்சம் அதிமுக வியூக அமைப்பாளரான ஹரி என்பவருடையது என்பதும் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து, அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படும் சமூக ஊடக மேலாண்மையில் பணியாற்றும் பிரம்மன்யா நிறுவனத்தைச் சேர்ந்த ஹரி மற்றும் சாய் ஆகிய இருவரை அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நேற்று (20-11-25) மாலை முதல் போலீசார் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், சர்புதீன் வீட்டில் 18 பேர் கொண்ட நபர்கள் வந்து பார்ட்டியில் ஈடுபட்டு ஓ.ஜி கஞ்சா பயன்படுத்தியுள்ளது என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சினிமா பிரபலங்கள், மாடலிங் துறையில் உள்ளவர்கள், வார இறுதி நாட்களில் சர்புதீன் வீட்டுக்குச் சென்று பார்ட்டியில் பங்கேற்றி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி, அந்த 18 நபர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்,

Advertisment

இந்த நிலையில், அதிமுக தேர்தல் வியூக அமைப்பாளர்களான ஹரி மற்றும் சாய் ஆகியோரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வரும் தகவல் அறிந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள், அரும்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.