தென்காசி மாவட்டத்தின் ஊர் மேல் அழகியான் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி. இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். முத்துக்குமாரசாமி, செங்கோட்டை நடுவர் நீதிமன்றம் மற்றும் முன்சீப் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், நேற்றைய தினம் தென்காசி கூலக் கடை பஜாரிலுள்ள தனது அலுவலகத்தில் சமயம் காலை 11.30 மணியளவில் வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி பணியிலிருந்த போது, அவரது அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். இதையடுத்து, திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை முகம், தலை உட்பட பல இடங்களில் சரமாரியாக படு பயங்கர வெறியுடன் வெட்டியுள்ளார்.

Advertisment

ரத்த வெள்ளத்தில் அலறிச் சரிந்த முத்துக்குமாரசாமியின் சத்தம் கேட்டு பதறியடித்துக் கொண்டு வந்த அக்கம் பக்கத்தினர், உடனையாக அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க சிகிச்சை பலனளிக்காமல் அவரது உயிர் பரிதாபமாகப் பிரிந்துள்ளது. தகவலறிந்து தென்காசி பார் அசோசியேசன், தென்காசி வழக்கறிஞர் சங்கம், ஆலங்குளம் செங்கோட்டை பார் அசோசியேசனைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட, சம்பவ இடம் வந்த தென்காசி எஸ்.பி.அரவிந்த் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தவர் குற்றவாளிகளைக் கைது செய்ய அமைக்கப்பட்ட தனிப்படையை விரைவுபடுத்தியிருக்கிறார்.

Advertisment

வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி சராமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட நேரத்தில், அவரது அலுவலகத்தின் அருகே சாலையில், உடையில் ரத்தக்கறையுடன் ஒருவர் நடந்து சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. அவருக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு உண்டா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்தது முத்துக்குமாரசாமியின் உறவினராக இருக்கலாம், குடும்ப விவகாரம் காரணமா என்ற கோணத்தில் விசாரணை போகிறது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொலைச் சம்பவம் நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட அரிவாள் மற்றும் செல்போன் ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருக்கிறது. இதனிடையே, குற்றவாளி அருகிலுள்ள கேராளவிற்கு தப்பியோடியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இன்று படுகொலையை கண்டித்தும், முத்துக்குமாரசாமி குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு தனிச்சட்டம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கரன்கோவில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியை புறக்கணித்து, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் நீதிமன்ற பணி புறக்கணிப்பு வரும் சனிக்கிழமை வரை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். பட்டப்பகலில் மாவட்ட தலைநகரில் அரசு வழக்கறிஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது அருவிகளின் நகரை உறையவைத்திருக்கிறது.

Advertisment