தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. 

Advertisment

அதேபோல் விஜய்யின் த.வெ.க.கவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இடம் பெரும் என்பதை அறிவிக்காமல் பொறுமை காத்து வருகிறது. பாமக கட்சியின் உரிமை தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே வெளிப்படையாகக் கருத்து ரீதியாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாமகவின் சின்னம் விவகாரம் தொடர்பான வழக்கு குறித்து ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். 

Advertisment

அப்போது அவர் பேசுகையில், “ஒரு பொய் கூட்டம், பொய்யும் புரட்டுமே அரசியலாக நடத்திக் கொண்டிருக்கின்ற ஒரு கூட்டத்தை நாங்கள் கட்சியிலிருந்து எடுத்துவிட்டோம். அவர்களை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து எடுத்துவிட்டோம். அவரோடு சேர்ந்த சில ஒரு கூட்டங்கள் பொய் பொய்யாகப் பேசுவது, இட்டுக்கட்டிப் பேசுவது ஏளனமாகப் பேசுவது, மனம் புண்படும் படி பேசுவதுமாக உள்ளனர். என்னை மட்டுமல்லாமல் 26 ஆண்டுக் காலம் ஓய்வின்றி உழைத்து வருகின்ற ஜி.கே. மணியை வசைபாடுவதை நாளும் தொழிலாகக் கொண்டு செய்து வருகிறது. அப்படிப் போன அந்த அரசியல் கூட்டம் அரசியல் பேசாமல் என்னை அரசியலிருந்து ஒழித்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு எதை எதையோ பேசுகிறார்கள். 

ramadoss-pm-2
கோப்புப்படம்

டெல்லி உயர்நீதிமன்றத்திற்குச் சென்று தேர்தல் ஆணையத்திடம் அதில் இருக்கின்ற சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு அவர்களே வழக்குப் போடுகிறது. தேர்தல் ஆணையமே ஒரு வழக்கைப் போடுவது வேடிக்கையிலும் வேடிக்கை இரண்டாவது முறையாகத் தீர்ப்பு வந்துள்ளது. இந்த இரண்டு முறையும் தீர்ப்பு நமக்கு (ராமதாஸ் தரப்பு) சாதகமாக வந்திருக்கிறது. அதனால் நீதிபதிகள் கேட்டிருக்கிறார்கள் நீங்கள் ஏன் வருகிறீர்கள். நீங்கள் ஏன் வழக்கைப் போடுகிறீர்கள்?. இதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

Advertisment