PMK MLAs meet Speaker Photograph: (pmk)
பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலையில் பாமக 2 அணியாகப் பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் தீர்வு எட்டப்படாத சூழலே நீடிக்கிறது. பாமகவில் நிர்வாகிகளுக்கு முக்கியப் பொறுப்புகளை ராமதாஸ் வழங்கி வருகிறார்.
ராமதாஸின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் எம்எல்ஏ அருளை பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக கடந்த 02/07/2025 அன்று அன்புமணி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 'ஒழுங்கு நடவடிக்கைக் குழு கொடுத்த புகார் அடிப்படையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் பாமகவினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது' என அன்புமணி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
நடப்பு பாமக எம்.எல்.ஏவை கட்சியில் இருந்து அன்புமணி நீக்கியது பாமக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் அதிர்ச்சியைக் கிளப்பி இருந்தது. தொடர்ந்து விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று (03/07/2025) பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''கட்சியில் இருந்து அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. அருள் பாமகவின் கொறடாவாகவும் அதேபோல் கட்சியின் இணைச்செயலாளர் பொறுப்பிலும் தொடர்வார்'' என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பாமகவின் புதிய கொறடாவாக மயிலம் எம்எல்ஏ சிவக்குமாரை நியமிக்கக்கோரி அன்புமணி ராமதாஸ் கொடுத்த பரிந்துரை கடிதத்தை சட்டப்பேரவைச் செயலாளரிடம் அளிப்பதற்காக பாமக எம்எல்ஏக்கள் தலைமை செயலகத்திற்கு வந்துள்ளனர். பாமகவில் ஜி.கே.மணி, அருள், சதாசிவம், சிவக்குமார், வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட மொத்தம் 5 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் சதாசிவம், சிவக்குமார், வெங்கடேஸ்வரன் ஆகிய மூன்று பேரும் கூட்டாகச் சட்டப்பேரவை செயலகத்திற்கு வந்துள்ளார். புதிய கொறடாவாக சிவக்குமாரை முன்மொழிவதாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.