சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் இன்று (14-12-25) காலை 9:30 மணிக்கு சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தொடரில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisment

இதையடுத்து, மறைந்த முன்னாள் கேரள முதல்வர் பி.எஸ். அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகலாந்து மாநில ஆளுநர் இல. கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மூத்த பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, ஐஏஎஸ் அதிகாரி மருத்துவர் பீலா வெங்கடேசன் உட்பட அனைவருக்கும் சட்டமன்றத்திலே இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடர் வரும் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Advertisment

முன்னதாக கூட்டத்தொடர் தொடங்கியதுமே, சட்டமன்ற வளாகத்தில் அன்புமணி தரப்பு பாமக எம்.எல்.ஏக்கள் சதாசிவம், சிவகுமார், வெங்கடேசன் ஆகியோர், பா.ம.க சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணியை மாற்றக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பா.ம.கவில் ராமதாஸ் தரப்பு, அன்புமணி தரப்பு என இரண்டு அணியாக செயல்பட்டு வரும் நிலையில், பா.ம.க சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணியை மாற்ற வேண்டும் என அன்புமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் சதாசிவம், வெங்கடேஸ்வரன், சிவக்குமார் ஆகியோர் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி சட்டப்பேரவைச் செயலாளரை சந்தித்து மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.