பா.ம.க.வில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சித் தலைவர் பதவி மற்றும் அதிகாரம் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமகவின் கவுரவ தலைவரும், ராமதாஸ் ஆதரவாளருமான ஜி.கே. மணி இன்று (16.09.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்திய இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ஒரு கடிதத்தைக் காட்டி ஒரு பரபரப்பான செய்தியாக மக்களை நம்ப வைக்கிற செய்தியாக அரசியலில் ஒரு திசை திருப்புகிற நடவடிக்கையாக நேற்று (15.09.2025) ஒரு செயல் நடந்தது.
அது மக்களை நம்ப வைக்கிறதுக்குத் திட்டமிட்டுச் செய்த ஒரு மோசடி என்று கூட அதனைச் சொல்லலாம். ஏன் அப்படியென்று சொன்னால், 30.07.2025 அன்று தேர்தல் ஆணையம் ஒரு கடிதத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த கடிதத்தில் சொல்லப்பட்டது பீகார், தமிழ்நாடு புதுச்சேரி மாநிலங்களுக்குப் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னம் என்று அந்த கடிதத்தில் இருக்கிறது. அந்த கடிதத்தினுடைய முகவரியில் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி , எண் 10, திலக் தெரு, தி நகர், சென்னை - 17 என்று இருக்கிறது. இந்த முகவரி மாற்றம் என்ற செய்தி என்பது ராமதாஸுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. ஏனென்றால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு நிரந்தரமான முகவரி சென்னையில் தலைமை அலுவலகமாக 63 நாட்டுமுத்து நாயக்கன் தெரு, தேனாம்பேட்டை, சென்னை.
இது தான் பாட்டாளி மக்கள் கட்சிக்கு நிரந்தரமான முகவரி. ஆனால் நிரந்தரமாக இருந்த முகவரியை எப்படியோ திசை திருப்பி ஒரு சூழ்ச்சியினால் கபட நாடகத்தால் முகவரி மாற்றப்பட்டிருக்கிறது. அந்த முகவரி மாற்றப்பட்டதே மோசடி செய்தி. இப்போது நிரந்தரமான முகவரி எப்படி மாற்றப்படும். இப்போது வந்திருக்கிற கடிதம் தேர்தல் ஆணையத்தினுடைய கடிதம். பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவர் பெயருக்கு. ஆனால் முகவரி தேனாம்பேட்டையில் இல்லாமல் திலக் தெருவுக்கு (தி. நகருக்கு) சென்றுள்ளது. இது ஏமாற்று வேலை அதற்கு முன்னால் 09.09. 2025இல் தேர்தல் ஆணையம் ஒரு கடிதம் வெளியிட்டிருந்தது. அந்த கடிதத்தில் பாட்டாளி மக்கள் கட்சி 09.09. 2025 மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூடி அந்த பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் அனுப்பிய அடிப்படையில் இதைப் பதிவு செய்து கொள்கிறோம் என்று கூறியுள்ளது. அது பதிவு செய்து கொடுக்கிறோம் என்று தான் சொல்லி இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜி.கே. மணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அன்புமணி ஆதரவாளரும், மூத்த வழக்கறிஞருமான பாலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கட்சியின் செயல்பாடுகளை, தலைவருடைய நிர்வாக பணிகளை ராமதாஸ் மேற்கொண்டதாகச் சரித்திரம் இருக்கிறதா?. இல்லை. அந்த விதிகள் உருவாக்குகின்ற போது மிகத் தெளிவாக உருவாக்கி இருக்கிறார்கள். நிர்வாக பணிகள் என்பது தலைவர், செயலாளர், பொருளாளர் என 3 பேர் மட்டும் தான் செய்ய முடியும். அதை மீறிச் செய்யக் கூடாது என்பதை அவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார். அதற்கு அடுத்தது 63 நாட்டு முத்து நாயக்கன் என்பதும், பதவிக்காலம் முடிந்துவிட்டது என்பதும் இன்றைக்குக் கடிதம் எங்களுக்கு வந்தது என்றும் சொல்கிறார்கள். கடந்த மாதம் 9ஆம் தேதி எங்களுடைய (அன்புமணி தரப்பு) பொதுக்குழு மகாபலிபுரத்தில் நடைபெற்றது. அதில் தான் நாங்கள் (அன்புமணி தரப்பு) ஆகஸ்ட் மாதம் 2026 ஆம் ஆண்டு வரை பதவிக்காலத்தை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றினோம்.
அதனை அடிப்படையாக வைத்துத்தான் அடுத்த நாளே அதாவது ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி நாங்கள் தேர்தல் ஆணையத்திற்குக் கடிதத்தை எழுதி பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று சொன்னோம். அதற்கு அடுத்து 11ஆம் தேதி சில விளக்கங்களைக் கூடுதலாகவும் கொடுத்தோம். இந்த இரண்டை அடிப்படையாக வைத்துத்தான் நேற்று (15.09.2025) நான் வெளியிட்ட அந்த கடிதத்தில் கால நீட்டிப்பு ஆகஸ்ட் வரை என்பது வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது அவர்கள் (ராமதாஸ் தரப்பு) சொல்வது, ரொம்ப குழந்தைத்தனமா இருக்கிறது. அவர் (ஜி.கே. மணி) சொல்வதில், கொஞ்சம் கூட ஒரு அடிப்படை ஒரு ஃபேக்ட்ஸ் (உண்மை) இல்லாமல் சொல்கிறார்கள்.
என்றென்றால் அது எங்களுக்குக் கொடுத்த கடிதம். எங்களுக்கு வர வேண்டிய கடிதத்தை மாற்றி தைலாபுரத்துக்கு வர வேண்டியது நம்பர் 10 திலக் தெருவிற்குப் போய்விட்டது என்று சொல்கிறார்கள். நான் கேட்கிறேன் என்றைக்கு நீங்கள் (ராமதாஸ் தரப்பு) வந்து பதவி நீட்டிப்பு கொடுங்கள் எனத் தீர்மானம் போட்டீர்கள்” எனத் தெரிவித்தார்.