பா.ம.க. கட்சியின் உரிமை தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும், அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே வெளிப்படையாகக் கருத்து ரீதியாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதல் காரணமாகக் கட்சி இரு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் தான் பா.ம.க.வின் பெயர், கொடி, சின்னத்தைப் பயன்படுத்த அன்புமணி ராமதாஸுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும்,  கட்சியின் தலைவராக தம்மை அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

Advertisment

அதன்படி இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் இந்த மனு தொடர்பாகத் தேர்தல் ஆணையம் மற்றும் அன்புமணி ஆகியோர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (09.03.2026) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புமணி ராமதாஸ் தரப்பில், “ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும்” என்று ஒரு புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ராமதாஸுக்கு தற்போது 87 வயதாகிவிட்டது. வயது மற்றும் மருத்துவ காரணங்களால் அவரால் நிர்வாக முடிவுகள் எடுக்கும் நிலையில் இல்லை.

Advertisment

ஆனால் சிலர் ராமதாசை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்.சில தனி நபர்கள் பா.ம.க கட்சிக்கு எதிராக தற்போது செயல்பட்டு வருகிறார்கள். ராமதாஸ் தலைவர் எனத் தன்னை அறிவித்துக் கொண்டது பா.ம.க.வின் சட்டவிதிகளுக்கு உட்பட்டது அல்ல. கட்சியின் நிறுவனர் என்ற அடிப்படையில்  கட்சிக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மட்டுமே அவரால் வழங்க முடியு. இது தவிர வேறு ஒன்றும் அவர் செய்ய முடியாது. பா.ம.க.வில் பொதுக்குழுதான் உச்சபட்ச அதிகாரம் கொண்டது. எனவே ராமதாஸ் தொடர்ந்த வழக்கானது விசாரணைக்கு உகந்தது அல்ல. அதனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

anbumani-vs-ramadoss

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணை நாளை மறுதினத்திற்கு (11.03.2026) ஒத்தி வைத்துள்ளார். அன்றைய தினம்  இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது ராமதாஸ் தரப்பு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மற்றொருபுறம் ராமதாஸ் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவுக்கு அன்புமணி தரப்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Advertisment