இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமும் (இஸ்ரோ), அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் இணைந்து விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பக்கூடிய திட்டத்தை ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனம் மூலம் செயல்படுத்தியுள்ளது. ‘ஆக்சியம் - 4’ எனப் பெயரிடப்பட்ட இந்த திட்டத்தில் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட அமெரிக்கா, போலந்து, மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4 பேர் கடந்த 25ஆம் தேதி பகல் 12:01 மணிக்கு பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு வெற்றிகரமாகப் புறப்பட்டனர்.
கடந்த 1984ஆம் ஆண்டில் ராகேஷ் ஷர்மா என்ற இந்தியர் ரஷியாவின் சோயுஸ் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற நிலையில், 41 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி இந்தியராக சர்வதேச விண்வெளிக்குச் செல்லும் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார். அவருக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்தன.
ஆக்சியம்-4 திட்டத்தின் விண்கலத்தை இந்தியாவின் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லா இயக்கிய நிலையில், கடந்த 26ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையில் வெற்றிகரமாக விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் தன்னுடைய அனுபவம் குறித்து சுபான்ஷு சுக்லா தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்த நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள சுபான்ஷு சுக்லாவுடன், இன்று (28-06-25) பிரதமர் மோடி நேரடி ஒளிபரப்பு மூலம் நலம் விசாரித்துள்ளார். அதில் பிரதமர் மோடி கூறியதாவது, “அங்கு அனைத்தும் சரியாக உள்ளதா? நீங்கள் நலமா?. தாய்மண்ணை விட்டு தூரம் இருந்தாலும், இந்தியர்களின் இதயத்துக்கு நெருக்கமாக உள்ளீர்கள். இந்தியர்களின் இதயத்துக்கு நெருக்கமாக உள்ளீர்கள். நாம் இருவரும் தற்போது பேசுகிறோம். ஆனால், 140 கோடி இந்தியர்களின் உணர்வு என்னுடன் இருக்கிறது. எனது குரலில் இருக்கும் உற்சாகம், அனைத்து இந்தியர்களையும் பிரதிபலிக்கிறது. நமது தேசியக் கொடியை விண்வெளி கொண்டு சென்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‘குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லாவுடன் அற்புதமான உரையாடல் நிகழ்த்தினேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.