இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்ய 3 நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று (17.10.2025) சந்தித்து பேசினார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவை வரவேற்பதில் பெருமகிழ்வடைகின்றேன். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், கண்டுபிடிப்பு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன்புரி உள்ளிட்ட பரந்தளவான விடயங்கள் குறித்து எமது கலந்துரையாடலில் கவனஞ்செலுத்தப்பட்டது. மிகவும் நெருக்கமான அயல் நாடுகளாக நமது இரு நாட்டு மக்களினதும் அதேபோல பகிரப்பட்ட பிராந்தியத்தினதும் சுபீட்சத்துக்கு நமது ஒத்துழைப்பானது அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதமர் ஹரிணி அமரசூரியா பிரதமர் மோடியை சந்தித்தார். அவரை அன்புடன் வரவேற்ற பிரதமர், வரலாற்று சிறப்புமிக்க, பன்முக தன்மை கொண்ட இந்தியா - இலங்கை உறவுகளுக்கு அவரது வருகை புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தாம் இலங்கையில் மேற்கொண்ட அரசுமுறை பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அப்போது ஒத்துழைப்பிற்கான அனைத்து துறைகளையும் உள்ளடக்கி அதிபர் அனுர குமார திசநாயகாவுடன் பயனுள்ள விவாதங்களை நடத்தியதாக கூறினார்.
கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்க மேம்பாட்டில் ஒத்துழைப்பு, மீனவர்கள் நலன் உட்பட பல துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியா-இலங்கை இடையேயான சிறப்பு உறவுகளை எடுத்துரைத்த பிரதமர், இருநாடுகளின் பகிரப்பட்ட வளர்ச்சிப் பயணத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிசெய்தார். அதிபர் திசநாயகாவுக்கு தமது அன்பான வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் தங்களின் தொடர்ச்சியான பணி ஈடுபாடுகளை தாம் எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கையிடமிருந்து கட்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டுப்பணிக் குழுவை மீண்டும் புதுப்பிக்கவும், இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ள இலங்கை பிரதமரை வலியுறுத்திட, பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (16.10.2025) கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.