மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிமின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று முன்தினம் (07.02.2026) மலேசியா புறப்பட்டுச் சென்றார். கடந்த 2015ஆம் ஆண்டிற்குப் பிறகு பிரதமர் மோடி மலேசியாவிற்கு மேற்கொள்ளும் 3வது பயணம் இதுவாகும். அதன்படி மலேசியத் தலைநகர்  கோலாலம்பூரைச் சென்றடைந்த பிரதமர் மோடியை, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம், அந்நாட்டு மனிதவளத் துறை அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் மற்றும் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் லுகானிஸ்மான் பின் அவாங் சௌனி ஆகியோருடன் இணைந்து வரவேற்றார். 

Advertisment

இதனைத் தொடர்ந்து,பிரதமர் மோடிக்கு இரு நாடுகளின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் வண்ணமயமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து, இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு புலம்பெயர்ந்தோர் மத்தியில் உரையாற்றும் இடத்திற்கு மலேசியப் பிரதமர் அன்வருடன் பிரதமர் மோடி கார் ஒன்றாக காரில் பயணம் மேற்கொண்டார்.  

Advertisment

இந்த இரு நாட்கள் பயணத்தின் ஒரு பகுதியாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பிரதமர் மோடிக்கு விருந்து அளித்தார். அப்போது கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ‘நாளை நமதே” என்ற எம்.ஜி.ஆர். பாடல் பாடப்பட்டது. இதனை பிரதமர் மோடி ரசித்து மகிழ்ந்தார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது நண்பர் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அளித்த மதிய விருந்தில், பாடப்பட்ட பாடல்களில் ஒன்றாக மகத்தான மனிதர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாளை நமதே' என்ற பாடலும்  இருந்தது. இந்தியாவில் உள்ள நம்மில் பலரைப் போலவே, பிரதமர் அன்வர் இப்ராஹிமும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் ஆவார்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

nalai-namathey

முன்னதாக மலேசியாவில் உள்ள புலம்பெயர் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், “பிரதமர் அன்வர் இப்ராகிம் மிக நன்றாகப் பாடுவார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்தியாவில் உள்ள பலருக்கு இது தெரியாது. அவரது கடந்த இந்தியப் பயணத்தின் போது, இது குறித்து அறிந்து அவர்கள் மகிழ்ச்சியுடன் கூடிய ஆச்சரியமடைந்தனர். அவர் இந்தியாவில் பழைய இந்திப் பாடலைப் பாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. மேலும், அவர் மறைந்த புகழ்பெற்ற நடிகர் எம்.ஜி.ஆரின் (legendary) தமிழ் பாடல்களை விரும்புவது மிகவும் அற்புதமான விஷயமாகும்” எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisment