மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று பயணம் மேற்கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 74 பயணிகள், 5 விமான ஊழியர்கள் என மொத்தம் 79 பேர் இருந்தனர். இந்நிலையில் இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டது.
இது குறித்து விமானி உடனடியாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். அதன் பிறகு உரிய அறிவுறுத்தல்களைப் பெற்று விமானத்தில் இருந்த விமானி சாமர்த்தியமாகச் செயல்பட்டு சென்னையில் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார். இதன் மூலம் விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டனர்.
எனவே நல்வாய்ப்பாக 79 பேரும் உயிர் தப்பியுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நடுவானில் விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்ட சம்பவம் விமான பயணிகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.