தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் எனத் தீவிரமாகத் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அண்மையில் அன்புமணி தரப்பு பா.ம.க இணைந்தது. இதனிடையே, நாளை (23.01.2025) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டத் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்குபெறும் கட்சிகளைக் கூட்டணி தலைமை அறிமுகப்படுத்த உள்ளது.

Advertisment

இதனையொட்டி தமிழக பாஜகவின் தேர்தல் மேலிடப் பொறுப்பாளரான பியூஷ் கோயல் தமிழகம் வந்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பியூஷ் கோயலை சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துக்கொண்டார். அதனை தொடர்ந்து, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், பியூஷ் கோயலை சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துக் கொண்டு தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Advertisment

இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று (22-01-26) வருகை தந்தார். அவர், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக- பா.ஜ.க இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பியூஷ் கோயலுடன் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பியூஷ் கோயல் மற்றும் பா.ஜ.க தலைவர்கள், அவரது வீட்டிலேயே காலை உணவு அருந்தினர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி இறுதி வடிவம் பெறும் நிலையில் முதன்முறையாக பழனிசாமி இல்லத்திற்கு பியூஷ் கோயல் வருகை தந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

Advertisment