மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்று வரும் போரின் காரணமாக ஹார்மோஸ் நீரிணை பாதையை ஈரான் தடுத்து வைத்துள்ளது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா என்னை வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தெற்காசிய நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே வங்கதேசத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.  

Advertisment

இந்த நிலையில் பாகிஸ்தானில் அதிர்ச்சி தரும் தகவல்களும் வெளியாகியுள்ளன. அதன்படி, வளைகுடா நாடுகளின் தொடரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் மக்கள் எதிர்வரும் நாட்களுக்கான எரிபொருளைச் சேமிக்க இப்போதே பெட்ரோல் பங்குகளில் வரிசையில் நிற்கின்றனர். இந்த சூழலைப் புரிந்து கொண்ட சில பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், எரிபொருளைப் பதுக்கி வைத்து, செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

Advertisment

இதன் விளைவாக, பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.55 அதிகரித்து ரூ.321 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல டீசல் ரூ.55 அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.335 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது எரிபொருள் விலையில் 15 முதல் 20 சதவீத விலை உயர்வு என்று கூறப்படுகிறது.  இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் எரிபொருள் அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 28 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு உள்ளது. அது தவிர 10 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது. அதே நேரத்தில், 15 நாட்களுக்குத் தேவையான சமையல் எரிவாயும் கையிருப்பு உள்ளது. எனவே, மக்கள் பீதியடைந்து எரிபொருளைச் சேமிக்க வேண்டாம்’ எனத் தெரிவித்துள்ளது.

Advertisment