வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரங்கநாதன். இவரது வீட்டிற்கு வெளியே வளர்க்கப்பட்டு வரும் ஒரு செடியில் உள்ள இரண்டு இலைகளில் வித்தியாசமான முக வடிவம் கொண்டது போன்ற உருவம் தென்பட்டுள்ளது. இதனைக் கண்டு அந்தக் குடும்பத்தினர் ஆச்சரியமடைந்துள்ளனர்.
அவர்கள் பயந்து, இதனால் ஏதாவது தீங்கு வருமோ என அஞ்சி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து பார்த்துவிட்டு, “உன் வீட்டிற்கு யாரோ செய்வினை செய்துள்ளனர், சூனியம் வைத்துள்ளனர், அதனால்தான் செடி இப்படி உருவாகியுள்ளது,” எனப் பயமுறுத்தியுள்ளனர். இதனால் குடும்பத்தினர் மேலும் பயந்து போயுள்ளனர். இந்தத் தகவல் ஊருக்குள் பரவ, ஊரில் உள்ள ஒவ்வொருவரும் வந்து அந்த இலையைப் பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறையினரிடம் பேசியபோது, “ஒரு செடியில் பூச்சி தாக்கினாலோ அல்லது சில பூச்சிகள் இலைகளில் கூடு கட்டினாலோ, பலவித உருவங்கள் தென்படலாம். இதனைப் பார்த்து வீணாகப் பீதி கிளப்புகின்றனர். இது மிகவும் சாதாரணமானது. மூடநம்பிக்கையால் சிலர் இதுகுறித்து தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். அந்த வீட்டினர் இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து செல்ல வேண்டும்,” எனக் கூறினர்.