மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, இமாசல பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்த 37 நாடாளுமன்ற மாநிலங்களவையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைய உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் என்.ஆர். இளங்கோ, பி. செல்வராசு, எம். தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி என்.வி.என். சோமு மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் (ஏப்ரல் 2ஆம் தேதி) முடிவடைய உள்ளது.

Advertisment

இந்நிலையில் ஓய்வு பெறும் மாநிலங்களவை உறுப்பினர்களின் காலி இடங்களை நிரப்புவதற்கான தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (18.02.2026) வெளியிட்டுள்ளது. அதில், “தேர்தல் குறித்த அறிவிப்பு பிப்ரவரி 26 (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் மார்ச் 05 ஆம் தேதி (வியாழக்கிழமை) ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 06ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள் மார்ச் 09ஆம் தேதி (திங்கட்கிழமை) ஆகும். போட்டியிருப்பின் வாக்குப்பதிவு மார்ச் 16ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 09:00 முதல்  மாலை 04:00 மணி வரை நடைபெறும். 

Advertisment

இதற்கான வாக்கு எண்ணிக்கை அன்று (மார்ச் 16ஆம் தேதி - திங்கட்கிழமை) மாலை 05:00 மணிக்கு நடைபெறும். தேர்தல் நடைமுறைகள் மார்ச் 20ஆம் தேதி முடிவடையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,  மாணிக்கம் தாகூர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழ்நாட்டின் நிலைமை தெரியாதது போல நடிக்கலாம். ஆனால் உள்ளக (internal) சர்வே முடிவுகள் எல்லாம் அவர்களின் மேசையில்தான் இருக்கும் அல்லவா? . ஒரு மாதிரி இணைத்துள்ளேன். அதனால்தான் 2026 சட்டமன்றத் தேர்தலை காத்திருக்காமல் ராஜ்யசபா தேர்தலை முன்கூட்டியே நடத்த அவசரம். காரணம் எளிது. 

rajyasabha-seat-share

இப்போது எப்படியாவது 2 ராஜ்யசபா சீட்களை எடுத்துக்கொள்ளலாம். தேர்தல் முடிந்த பிறகு ஒரு சீட்டுக்குக் கூட கணக்கு போட முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?. நயினார் நாகேந்திரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைந்தால் பெரிய அலை வருமாம் என்கிறார்கள். ஆனால் 2026-ல் 20% வாக்கு கூட கடக்க முடியுமா? என்பது தான் பெரிய கேள்வி. அதிமுக மூன்றாம் இடம் என்பது இப்போது ‘அதிர்ச்சி செய்தி’ அல்ல மெதுவாக ‘அரசியல் உண்மை’ ஆகி கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மக்களை அரசியல் கணக்குப் புத்தகத்தில் கணக்கிட முடியாது. அவர்கள் முடிவு எடுத்துவிட்டால், எந்த அவசரத் திட்டங்களாலும் அதை மாற்ற முடியாது” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisment