புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனை அறந்தாங்கியில் சமீப காலமாக பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளதால் உள்நோயாளிகள், அவர்களின் உறவினர்களின் பொருட்கள் திருட்டு போவது வழக்கமாகிவிட்டது.
இந்த நிலையில், நேற்று இரவு நள்ளிரவில் மருத்துவமனை உள்நோயாளிகள் பிரிவுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்தவர்களின் செல்போன்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். அதாவது, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கொடிக்கரம்பை பகுதியைச் சேர்ந்த நீலகண்டன், கஸ்தூரிதேவி, அறந்தாங்கி அக்னி சரவணன், மற்றும் 2 பேருடைய செல்போன்கள் என 5 செல்போன்களையும், கோங்குடி கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவரின் ரூ.3 ஆயிரம் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதிகாலையில் எழுந்து பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதே போல ஏற்கனவே பல முறை திருட்டு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் இரவு பாதுகாவலர்கள் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தும் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடப்பதால் அரசு மருத்துவமனைல் பாதுகாப்பில்லை என்கின்றனர் பொதுமக்கள். சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதன் பிறகு திருடர்களை பிடிக்கலாம் என்கின்றனர்.