புதுக்கோட்டை மாவட்டத்தில் தை பிறந்தால் ஜல்லிகட்டுக்கு அடுத்தபடியாக அதிகமாக நடத்தப்படும் விளையாட்டு வழுக்குமரம் ஏறுதல். பரிசுத் தொகைக்கு ஏற்ப மரத்தின் உயரத்திலும் ஏற்றம் இறக்கம் இருக்கும். ஆனால் ஒவ்வொரு வழுக்கு மரத்திலும் சுமார் ரூ.5000 முதல் ரூ.30 ஆயிரம் வரை பரிசும் சுழற்கோப்பையும் வழங்கப்படுகிறது. இந்த மரங்களில் ஏற மற்ற விளையாட்டுகளைப் போல அணிகளாகவே ஒருவர் மீது ஒருவர் ஏறி பரிசை அள்ளிச் செல்கின்றனர்.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு கிராமத்தில் தான் அதிக உயரமான வழுக்கு மரங்கள் நடப்பட்டு விறுவிறுப்பான போட்டி நடத்தப்படும். அதாவது 50, 60 அடி உயர தைல மரத்தை பட்டை நீக்கி வழுவழுப்பாக கிலோ கணக்கில் கிரீஸ் பூசி ஆழமான குழி எடுத்து ஆழ்குழாய் கிணறு அமைக்கும் இயந்திரம் மூலம் தூக்கி நிறுத்தி மரம் சாய்ந்துவிடாமல் கயிறுகட்டி பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு, கீழே தென்னை நார் ஔழிவுகளை மெத்தை போல பரப்பிய பிறகே போட்டி தொடங்கும். வடகாட்டில் கடந்த 17ஆம் தேதி இரவு ரூ. 20,001 பரிசு தொகையுடன் நடத்தப்பட்ட வழுக்கு மரத்தில் பல அணிகள் பங்கேற்றாலும் இறுதியில் பனங்குளம் கிங்பிசர் அணியினரே உச்சியை தொட்டு ரொக்கப்பரிசையும் சுழற்கோப்பயும் வென்றனர்.

Advertisment

அதே போல நேற்று (18-01-26) இரவு வடகாடு பரமநகரில் நடந்த வழுக்குமரம் ஏறும் போட்டியிலும் அதிக உயரம் கொண்ட மரம். இதிலும் பல அணிகள் ஏறி பரிசை எடுக்க முயன்றனர். இறுதியில் 9 பேர் ஏறலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பனங்குளம் கிங்பிசர் அணியில் 9 பேர், ஒருவர் மீது ஒருவர் ஏறியும் உச்சியை தொடமுடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், மேலே ஏறிய இளைஞர் மரத்தில் பூசியிருந்த கிரீஸ்களை அகற்றி வேகவேகமாக மேலே ஏறி உச்சியை தொட்டார். இதனைக் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் உற்சாக கோசங்களுடன் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். ஒரே நிமிடத்தில் பனங்குளம் கிங்பிசர் அணி வெற்றி இலக்கை எட்டி ரூ.26,001 பணம் மற்றும் ஆள் உயர சுழற்கோப்பை ஆகியவற்றை வெற்றனர். 

panai2

இதே அணி தான் முதல் நாளும் வடகாட்டில் வெற்றி பெற்றது. 50 அடி உயர வழுக்கு மரத்தில் ஏறி வெற்றி பெற்ற பனங்குளம் கிங்பிசர் அணியினரை பாராட்டிய அமைச்சர் மெய்யநாதன் பரிசு மற்றும் சுழற்கோப்பையை வழங்கினார். மிகுந்த ஆரவாரத்துடன் கிங்பிசர் அணியினர், வெற்றி பெற்ற வழுக்கு மரத்தடியில் நின்று சுழற்கோப்பையுடன் குழு படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் வெற்றி பெற்ற அணியினரை பொதுமக்களும் பாராட்டினர். 

Advertisment