அவதூறு கருத்து தெரிவித்ததற்காக, அ.இ.அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அ.இ.அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டி, தனக்கு எதிராக அவதூறு வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டு களங்கம் விளைவித்ததாகக் கூறி, யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு உத்தரவிட்டார்.

Advertisment

இந்நிலையில், தனது தரப்பு விளக்கம் ஏதும் கேட்காமல், ஒரு தரப்பு வாதத்தை மட்டும் கேட்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஜோ மைக்கேல் பிரவீன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஜோ மைக்கேல் பிரவீன் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜோ மைக்கேல் பிரவீன் தரப்பில், "வழக்கு தொடர்பாக சம்மன் வரவில்லை என வழக்கறிஞரின் ஆலோசனையின் அடிப்படையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது தவறு தான். வழக்கறிஞரின் தவறுக்காக மனுதாரரைத் தண்டிக்கக் கூடாது," என வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், "வழக்கறிஞரின் தவறுக்காக வழக்காடி பாதிக்கப்படக் கூடாது," எனக் கூறி, 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.மேலும், மான நஷ்டஈடு கோரிய வழக்கை மீண்டும் விசாரிக்கவும் உத்தரவிட்டனர்.

Advertisment