சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (27.02.2026) தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். மேலும், அதிமுக முன்னாள் எம்.பி.யும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி. ரவிந்தரநாத், ஓ.பன்னீர்செல்வத்தின் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பனும் திமுகவில் இணைத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த திமுகவில், தாய்க் கழகமான திமுகவில் மகிழ்ச்சியோடு என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன்.
என்னை இணைத்துக் கொண்டிருக்கிற திமுக தலைவர், தமிழக முதல்வருக்கு முதல் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைக்கு அரசியலில் அண்ணா காட்டிய வழி, கலைஞர் காட்டிய வழியில் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்கின்ற அரசியல் பண்பாட்டோடு தளபதி (முதல்வர் மு.க. ஸ்டாலின்) கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நன்றாக உணர்ந்து திமுகவில் பெரு மகிழ்ச்சியுடன் இணைந்திருக்கிறேன். அரசியலில் சர்வதிகாரியாக, ஆணவப் போக்கோடு நடந்துகொள்கின்ற எடப்பாடி எந்த காலத்திலும், இனி அரசியலில் வெற்றி பெற முடியாத சூழலை அதிமுகவிற்கு உருவாக்கியிருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள், தளபதி (முதல்வர் மு.க. ஸ்டாலின்) தலைமையை ஏற்று திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தளபதியை நாடு உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு அரசியல் இயக்கத்தை அரவணைப்போடு எப்படி நடத்திட வேண்டும் என்ற இலக்கணத்தோடு தளபதி, திமுகவை வழிநடத்திடச் சென்று கொண்டிருக்கிறார். ஆட்சியில் கடந்த 5 ஆண்டுக் காலம் முதல்வராகப் பொறுப்பேற்று அனைத்து நிலைகளிலும், துறைகளிலும் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிற நோக்கத்தோடு நல்லாட்சியை, சிறந்த ஆட்சியை, சீர்மிகு ஆட்சியைத் தமிழக மக்களுக்குத் தந்து கொண்டிருக்கிறார். இதனை நாடு உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/27/ops-mks-dmk-join-2-2026-02-27-11-05-49.jpg)
பெண்கள் மனமகிழ்ச்சியோடு, குடும்பத்தின் தலைவியாக இருந்து கொண்டுள்ள அவர்களுக்கு, எவ்வித சிரமும் இன்றி குடும்பத்தை வழிநடத்திச் செல்ல அனைத்து உதவிகளையும் முதல்வர் தந்து கொண்டிருக்கிறார். சட்டமன்ற வரலாற்றில் பேரறிஞர் அண்ணா எப்படி அனைத்து கட்சிகளையும் அரவணைப்போடு நடத்தினாரோ அதைப்போலத் தளபதியும் சட்டமன்றத்தில் தாய் உள்ளத்தோடு அணைத்து உறுப்பினர்களுக்கும் சமபங்காகப் பேசுகின்ற உரிமையைத் தந்து, அவர்களது கருத்துகளை உன்னிப்பாகக் கவனித்து அதற்குத் தக்க பதிலை அவர் தருகின்ற பாங்கு, தமிழக மக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us