சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் வழங்கும் நிகழ்வு அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கியது. அதன்படி பெறப்பட்ட விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்வது இன்று (06.06.2026) மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் எனத் தமிழகம் முழுவதும் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களைப் பெற்றிருந்தனர். அதில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களுடைய விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதோடு தொடர்ந்து விருப்ப மனுத் தாக்கலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட முன்னாள் எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் விருப்ப மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து ஓ.பி.ரவிந்தநாத் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிரந்தர முதலமைச்சராக உள்ள மு.க. ஸ்டாலினுக்காகவும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்காகவும் ஓ. பன்னீர்செல்வத்தின் சார்பாகத் தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, போடி, கம்பம் உள்ளிட்ட 3 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தமாக 6 வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளேன்.
ஓ. பன்னீர்செல்வத்திற்கு போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியிலும், நான் போடிநாயக்கனூர் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியிலும் விருப்ப மனுவைப் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞரின் ஆசியோடும் முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதியின் (மு.க. ஸ்டாலின்) பேராசியுடன் விருப்ப மனுவை அளித்திருக்கிறேன். தொண்டர்கள் இணைப்பு விழா திருமங்கலத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மிகச் சிறப்பான ஒரு மாநாடு போன்று நிகழ்ச்சி நடைபெறும்” எனத் தெரிவித்தார்.
Follow Us