சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த சிவகாமி என்ற மூதாட்டி மீதும், நிகிதா என்ற பெண் மீதும் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அரசு வேலை வாங்கி தருவதாக 9 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நிகிதாவால் ஏமாற்றப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த மோசடிகளை தெரிவித்து வருகின்றனர். அஜித் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த உத்தரவின் படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் விசாரணை நடத்தி வருகிறார்.

இன்றும் நான்காவது நாளாக விசாரணையானது நீதிபதி ஜான் சுந்தர் தலைமையில் தொடங்கியது. இன்றைய விசாரணையில் திருப்புவனம் காவல் நிலையத்தில் வைத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம், காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர் உள்ளிட்டோரிடம் நீதிபதி ஜான் சந்தர் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மடப்புரத்தில் உள்ள அஜித்தின் வீட்டுக்கு சென்று அவரின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் அஜித்தின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து தன் சார்பில் 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார்.